கையில் அரிவாள்.. சிவப்பு தலைப்பாகை.. நெல் அறுவடையில் தீவிரமான ராகுல்.. அட விவசாயியாவே மாறிட்டாரே
ராய்ப்பூர்: ராகுல் காந்தி தலையில் சிவப்பு நிற தலைப்பாகை கட்டி கையில் அரிவாள் பிடித்து வயலில் நெல் அறுவடை செய்து முழு விவசாயியாக மாறிய போட்டோ இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக பூபேஷ் பாகேல் உள்ளார். அந்த மாநிலத்துக்கு தற்போது சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது சத்தீஸ்கர் மாநிலத்தில் 2 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. நவம்பர் 7 ம் தேதி முதல் கட்டமாகவும், நவம்பர் 17 ம் தேதி 2வது கட்டங்களாகவும் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்த தேர்தலில் பதிவாகும் ஓட்டுக்கள் டிசம்பர் 3ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தை பொறுத்தமட்டில் காங்கிரஸ்-பாஜக இடையே நேரடியாக போட்டி நிலவுகிறது. இந்த மாநிலத்தில்மொத்தம் 90 சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் ஒரு கட்சி 46 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.

இந்நிலையில் தான் தனி மெஜாரிட்டியை ஆட்சியை தக்கவைக்க காங்கிரஸ் கட்சி தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டு வருகிறது. மாறாக காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி அரியணை ஏற பாஜக களப்பணியாற்றி வருகிறது. இதனால் சத்தீஸ்கர் மாநில தலைவர்களுடன் சேர்ந்து காங்கிரஸ், பாஜகவின் தேசிய தலைவர்கள் தீவிர பிரசாரத்தை தொடங்கி உள்ளனர்.
இந்நிலையில் தான் ராகுல் காந்தி சத்தீஸ்கர் மாநிலத்தில் தேர்தல் பிரசாரத்துக்காக 2 நாள் பயணமாக சென்றார். 2வது நாளான நேற்று ராகுல் காந்தி ராய்ப்பூர் அருகே உள்ள காதியா கிராமத்தில் நெல் அறுவடை செய்யும் விவசாயிகளை வயலில் சந்தித்தார். அப்போது ராகுல் காந்தி தலையில் சிவப்பு நிறத்தில் தலைப்பாகை கட்டி நெல் அறுக்கும் பணியில் ஈடுபட்டு விவசாயிகளோடு சேர்ந்து விவசாயியாகவே மாறிப்போனார். இந்த வேளையில் ராகுல் காந்தியுடன் முதல்வர் பூபேஷ் பாகேல், துணை முதல்வர் டிஎஸ் சிங் டியோ உள்ளிட்டோரும் இருந்தனர்.

இதுதொடர்பான போட்டோக்கள் தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. சத்தீஸ்கர் மாநில தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சி விவசாயிகளுக்கு 5 முக்கிய திட்டங்களை அறிவித்துள்ளது. குறிப்பாக விவசாய கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கான மானியம், நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்துதல் உள்ளிட்டவற்றை வழங்குவதாக உறுதியளித்துள்ளது. இதனை விவசாயிகளிடம் எடுத்து கூறும் வகையில் ராகுல் காந்தி பிற விவசாயிகளுடன் சேர்ந்து வயலில் நெல் அறுவடை செய்தார்.
அதன்பிறகு ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் நெல் அறுவடை செய்யும் போட்டோக்களை பதிவிட்டார். அதில், ‛‛ விவசாயிகள் மகிழ்ச்சியாக இருந்தால் இந்தியாவும் மகிழ்ச்சியாக இருக்கும். விவசாயிகளை மகிழ்ச்சியாக்க 5 முக்கிய திட்டங்களை சத்தீஸ்கர் மாநில விவசாயிகளுக்கு காங்கிரஸ் செய்கிறது. நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலை என்பது குவிண்டாலுக்கு ரூ.2,640 வழங்கப்படும்.
26 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.23,000 கோடிக்கு இடுபொருள் மானியம் வழங்கப்படும். 19 லட்சம் விவசாயிகளின் ரூ.10,000 கோடி மதிப்பிலான கடன் தள்ளுபடி, மின்சார கட்டணம் பாதியாக்குவது, 5 லட்சம் விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.7 ஆயிரம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது'' என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications