பிரிட்டிஷ் குடியுரிமை கிடைக்கவிடாமல் ப.சிதம்பரம் சதி - நாடு கடத்தவும் முயற்சி: லலித் மோடி பாய்ச்சல்
டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் சதியால்தான் தமக்கு பிரிட்டிஷ் குடியுரிமை கிடைக்கவில்லை என்றும் தம்மை இங்கிலாந்தில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தவும் அவர் முயற்சித்தார் என்றும் ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித் மோடி சாடியுள்ளார்.
ஐ.பி.எல். நிதி மோசடியில் சிக்கிய நிலையில் இந்தியாவை விட்டு தப்பியோடி லண்டனில் தஞ்சமடைந்தார் லலித் மோடி. இந்த லலித் மோடிக்கு வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரராஜே சிந்தியா ஆகியோர் உதவியதாக சர்ச்சை வெடித்துள்ளது.
இந்த சர்ச்சைகள் தொடர்பாக இந்தியா டுடே குழுமத்தின் ஹெட்லைன்ஸ் டுடே சேனலுக்கு லலித் மோடி அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:
பொய் சொன்ன சசிதரூர்
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் அமைச்சராக இருந்த சசி தரூர், ஐ.பி.எல். கொச்சி அணிக்கும் தமக்குமான தொடர்புகள் குறித்து பொய்யான தகவல்களை நாடாளுமன்றத்தில் கூறினார்.. தொடர்ந்து இதேபொய்களை கூறிவந்தார். இதனால் அவர் அமைச்சர் பதவியை இழந்தார்.
ப.சிதம்பரம் சதி
இதனால் என் மீது கோபத்தில் இருந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு என்னை பழிதீர்க்க நினைத்தது. எனக்கு பிரிட்டிஷ் குடியுரிமை கிடைக்கவிடாமல் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் சதி செய்தார்.
நாடு கடத்த முயற்சி
சிதம்பரம் என்னை இந்தியாவுக்கு நாடு கடத்தவும் முயற்சி செய்தார். எனக்கு எந்த ஒரு நோட்டீஸுமே பிறப்பிக்கப்படாத நிலையில் தாம் ஒரு அமைச்சர் என்பதை மட்டுமே பயன்படுத்தி என்னை நாடு கடத்த சிதம்பரம் சதி செய்தார்.
உயிருக்கு ஆபத்து
நான் நினைத்திருந்தால் இந்தியக் குடியுரிமையை உதறிவிட்டு வேறு நாட்டுக் குடியுரிமையுடன் பாஸ்போர்ட் பெற்றிருக்கலாம். நான் அதைச் செய்யவில்லை. நான் குற்றமற்றவன் என்பதை நிரூபிக்க விரும்புகிறேன். இந்தியாவுக்கு திரும்பினால் என் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும். எனவே, நான் வெளிநாட்டில் இருக்கிறேன்.
இவ்வாறு லலித் மோடி கூறினார்.