ப.சிதம்பரத்துக்கு ராஜ்யசபா எம்.பி. சீட் கிடைக்க விடாமல் குழிபறிக்கும் ஜி.கே. வாசன்!!
டெல்லி: லோக்சபா தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொண்ட மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம் மற்றும் ஜி.கே.வாசன் இருவரும் தற்போது ராஜ்யசபா எம்.பி. சீட்டுக்காக முட்டி மோதிக் கொண்டிருக்கின்றனர். இதில் ஜி.கே.வாசன் தமக்கு நிச்சயம் ராஜ்யசபா எம்.பி.சீட் கிடைக்காது என்பதால் எதிரி ப.சிதம்பரத்துக்கும் கிடைக்கக் கூடாது என்பதற்கான அத்தனை குழிபறிப்பு வேலைகளிலும் இறங்கியுள்ளதாக காங்கிரஸ் வடாரங்கள் தெரிவிக்கின்றன.
லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி கூட்டணி எதுவும் இல்லாமல் தனித்து போட்டியிடுகிறது. இதனால் தமிழகத்தில் காங்கிரஸ் படுதோல்வியை சந்திக்கும் என்பது தெரிந்த ஒன்றாகிவிட்டது.
இதனாலேயே ப.சிதம்பரம், ஜி.கே.வாசன், தங்கபாலு போன்ற மூத்த காங்கிரஸ் தலைவர்கள் பலரும் தேர்தலில் தாங்கள் போட்டியிடவே இல்லை என்று வேட்பாளர் பட்டியல் வெளியாவதற்கு முன்பாக பகிரங்கமாகவே அறிவித்து ஒதுங்கிக் கொண்டனர்.
ராஜ்யசபா சீட்டுக்காக போட்டி
தற்போது ப.சிதம்பரமும் ஜி.கே.வாசனும் ராஜ்யசபா எம்.பி. பதவியைப் பெறுவதற்கான தீவிர லாபிகளை மேற்கொண்டு வருகின்றனர். கடைசியாக தமிழகத்தில் நடைபெற்ற ராஜ்யசபா தேர்தலில் எப்படியும் திமுக அல்லது தேமுதிக ஆதரவுடன் மீண்டும் எம்.பி.யாவது என்று கங்கணம் கட்டிக் கொண்டு ஓடினார் ஜி.கே.வாசன்.
ஜி.கே.வாசன் மீது அதிருப்தி
ஆனால் ஜி.கே.வாசனுக்கு காங்கிரஸ் மேலிடம் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. ஏற்கெனவே ஜி.கே.வாசனை லோக்சபா தேர்தலில் போட்டியிடுங்கள் என்று ராகுல் கடிந்து கொண்ட கதையும் நடந்துள்ளது. ஆனாலும் விடாத முயற்சியாக டெல்லி லாபிக்கள் மூலம் ராஜ்யசபா எம்.பி. பதவியை வேறு ஒரு மாநிலத்தில் இருந்து பெற்றுவிடுவதற்காக ஜி.கே.வாசன் தீவிரமாக முயற்சிகளை மேற்கொண்டு வருகிறாராம்.
பிரசாரத்துக்கு கைமாறு
லோக்சபா தேர்தலில் போட்டியிடாவிட்டாலும் 40 தொகுதிகளிலும் தீவிர பிரசாரம் செய்தேனே.. எனக்கு ராஜ்யசபா எம்.பி. பதவி தாருங்கள் என்பது ஜி.கே.வாசனின் வேண்டுகோளாம்.
பிரதமர் கனவில் சிதம்பரம்
அதே நேரத்தில் காங்கிரஸில் சீனியர் தலைவர்கள் பட்டியலில் இருக்கும் 'பிரதமர் கனவு' தலைவரான ப.சிதம்பரமும் டெல்லியில் முகாமிட்டு கர்நாடகா அல்லது மகாராஷ்டிராவில் இருந்து தம்மை ராஜ்யசபா எம்.பி.யாக தேர்வு செய்வதற்கான லாபியில் ஈடுபட்டு வருகிறார்.
கோதாவில் குதிக்கும் ஜெயந்தி
இவர்களுடன் திடீரென தேர்தல் களத்தில் இருந்து காணாமல் போன ஜெயந்தி நடராஜனும் ராஜ்யசபா எம்.பி.யாவதற்கான லாபிகளிலும் இறங்கியுள்ளாராம். இதனால் காங்கிரஸ் மேலிடம் யாருக்கு வாய்ப்பளிப்பது என்பது குறித்து தீவிர ஆலோசனையில் இருக்கிறது.
தனிக்கட்சி மிரட்டல்
அத்துடன் தமக்கு ராஜ்யசபா எம்.பி. பதவி தரவில்லையெனில் காங்கிரஸை விட்டு வெளியே தனிக்கட்சி தொடங்குவேன் என்று ஜி.கே.வாசன் மிரட்டல் ஆயுதத்தை கையில் எடுத்திருக்கிறாராம். இது காங்கிரஸ் மேலிடத்தை கடுப்பேற்றினாலும் சகித்துக் கொண்டுதான் கேட்டுக் கொள்வதாக கூறப்படுகிறது.
அரசியலுக்கே முழுக்கு
ஆனால் ப.சிதம்பரமோ தமக்கு ராஜ்யசபா எம்.பி. பதவி தராவிட்டால் அரசியலைவிட்டே ஒதுங்கிப் போய்விடுவேன் என்று கூறி வருகிறாராம். லோக்சபா தேர்தலுக்குப் பின்னர் கூட்டணி அரசு அமைப்பதற்கு சிதம்பரம் போன்ற நபர்களின் பங்கு முக்கியம் என்பதால் அவரை அரவணைத்துக் கொள்ளத்தான் காங்கிரஸ் மேலிடம் பார்ப்பதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிதம்பரம் தரப்பு மறுப்பு
ப.சிதம்பரத்துக்கு நெருக்கமான வட்டாரங்களோ, நிச்சயமாக எங்கள் தலைவரை காங்கிரஸ் மேலிடம் கைவிடாது. ஜி.கே.வாசனுக்கு ராஜ்யசபா சீட் கிடைக்காது என்பது தெரிந்த ஒன்றுதான். அதனாலேயே ப.சிதம்பரம் அரசியலைவிட்டு ஒதுங்கிவிடுவார் என புரளி கிளப்பிவிட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்கிறது. அதாவது தனக்கு சீட் கிடைக்காது என்பதால் சிதம்பரத்துக்கும் கிடைக்கக் கூடாது என்று வாசன் நினைக்கிறார் என்று பகிரங்கமாகவே குற்றம்சாட்டுகின்றனர். இன்னும் எத்தனை உள்குத்து வெளிகுத்து இருக்கிறதோ?