உச்சநீதிமன்ற நீதிபதிகள் பெஞ்ச்சுக்கு நடுவே முரண்பாடு.. தலைமை நீதிபதி தலைமையில் பெஞ்ச்
டெல்லி: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, தனது தலைமையில் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வை உருவாக்கியுள்ளார்.
இரண்டு அல்லது மூன்று நீதிபதிகள் பெஞ்ச்சில் ஏற்படும் பிரச்சினைகளை சரி செய்ய இந்த அமர்வு ஏற்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. நில கையகப்படுத்துதலுக்கு நிவாரண நிதி ஒதுக்குவது தொடர்பாக 2014ம் ஆண்டு தலைமை நீதிபதி லோதா தலைமையில், நீதிபதிகள் மதன் பி.லோக்கூர் மற்றும் குரியன் ஜோசப் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக, பிப்ரவரி 8ம் தேதி நீதிபதிகள் அருண் மிஸ்ரா, ஏ.கே.கோயல் மற்றும் சாந்தனகவுடர் ஆகியோர் தீர்ப்பு வழங்கினர்.

இதுகுறித்து குரியன் ஜோசப், 'ஓபன் கோர்ட்டில்' தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். இதுபோன்ற மாறுபட்ட தீர்ப்பு, நீதித்துறை ஒழுங்கிற்கு எதிரானது என்பது அவரது கருத்து.
3 நீதிபதிகள் பெஞ்ச் வழங்கிய தீர்ப்பை மற்றொரு 3 நீதிபதிகள் பெஞ்ச் மாற்றம் செய்திருக்க கூடாது என்றும், பதிலாக, 5 நீதிபதிகள் பெஞ்ச்சுக்கு அதை மாற்றியிருக்க வேண்டும் என்றும் குரியன் ஜோசப் தெரிவித்துள்ளார்.
குரியன் ஜோசப் கருத்தையடுத்து மறுநாளே, நில கையகப்படுத்துதல் வழக்குகளை தலைமை நீதிபதி பெஞ்சுக்கு மாற்றம் செய்யப்பட்டது. தலைமை நீதிபதியே இதுகுறித்து முடிவு செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் மிஸ்ரா பெஞ்ச் கோரிக்கைவிடுத்தது.
இந்த நிலையில், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் 5 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் அமைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications