நவராத்திரி பண்டிகை.. அரசு ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த முதல்வர்! வெளியான ஸ்வீட் அறிவிப்பு
அமராவதி: தசரா பண்டிகையையொட்டி அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) ஒரு தவணை வழங்கப்படும் என ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்திருக்கிறார். அதேபோல மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறையின் பெண் ஊழியர்களுக்கு ஆண்டுக்கு ஐந்து நாட்கள் கூடுதல் விடுப்புகள் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
நாடு முழுவதும் ஒரே காலகட்டத்தில் கொண்டாடப்படும் விழாக்களில் தசரா பண்டிகையும் ஒன்று. இது நவராத்திரி, துர்கா பூஜை என்று வெவ்வேறு பெயர்களிலும் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் இந்த தசரா பண்டிகையையொட்டி அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (டிஏ) ஒரு தவணை வழங்கப்படும் என ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்திருக்கிறார். நேற்றைய தினம் விஜயவாடாவில் அரசிதழ் அல்லாத அதிகாரிகள் (APNGOs) சங்கத்தின் 21வது மாநில கவுன்சில் கூட்டம் நடைபெற்றது.

இதில் பங்கேற்று பேசிய அவர், மேற்குறிப்பிட்ட அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். ஆந்திரப் பிரதேசத்தை மற்ற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாய் உருவாக்கும் விதத்தில் பல்வேறு அறிவிப்புகளை அவர் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். தற்போது அதன் தொடர்ச்சியாக இந்த அறிவிப்பும் வெளியாகியுள்ளது. இது தவிர மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறையின் பெண் ஊழியர்களுக்கு ஆண்டுக்கு 5 நாட்கள் கூடுதல் விடுப்புகள் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
மேலும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்திற்கு (சிபிஎஸ்) மாற்றாக உத்தரவாத ஓய்வூதியத் திட்டம் (ஜிபிஎஸ்) விரைவில் அமல்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், "நிஜாம் சர்க்கரை ஆலை, சித்தூர் பால்பண்ணை மற்றும் குடியரசு போர்ஜ் போன்ற 54 பொதுத்துறை நிறுவனங்களை தெலுங்கு தேசம் கட்சி மூடியது. இதனால் ஏராளமான இளைஞர்கள் வேலையை இழந்து கஷ்டப்பட்டனர். ஆனால் நான் ஆட்சிப்பொறுப்பேற்ற பின்னர் 2,06,638 பேருக்கு நிரந்தர வேலை வழங்கப்பட்டுள்ளது.
மட்டுமல்லாது 53,000 ஊழியர்களின் சேவைகளை முறைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், M&HD இல், 53,260 பேர் பணியமர்த்தப்பட்டு, 10,000 ஒப்பந்த ஊழியர்களின் சேவைகள் 2014-ஆம் ஆண்டைக் கட்-ஆஃப் ஆண்டாகக் கொண்டு முறைப்படுத்தப்பட்டு, மொழி ஆசிரியர்களுக்கும், 1998 டிஎஸ்சி தேர்வர்களுக்கும் நீதி வழங்கப்பட்டது என்னுடைய ஆட்சியில்தான். நாங்கள் பொறுப்பேற்ற ஆறு மாதங்களுக்குள், கிராம மற்றும் வார்டு செயலகங்களில் 1,35,000 பேர் நியமிக்கப்பட்டனர்" என்று கூறியுள்ளார்.
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுடன் ஆந்திர பிரதேசத்தின் சட்டமன்ற தேர்தலும் நடைபெறுவதால் மக்களுக்கான அறிப்பில் ஜெகன்மோகன் அரசு தீவிரம் காட்டி வருகிறது. அதேபோல நாடாளுமன்ற தேர்தலில் ஜெகன்மோகனின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி மொத்தமுள்ள 25 எம்பி சீட்களில் 24-25 இடங்களை கைப்பற்றும் என்று கருத்துக்கணிப்புகள் கூறியிருந்தன. எனவே இதனை உறுதி செய்ய அரசு ஊழயர்கள் விஷயத்தில் அவர் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். தற்போது வெளியாகியுள்ள இந்த DA அறிவிப்பால் ஆந்திர அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்திருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications