ராகுல் காந்தி பேரணியில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு.. திறந்த ஜீப்பில் ஊர்வலம்
பீகார்: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், வாக்குகள் திருட்டு குற்றச்சாட்டை தெரிவித்தும், தேர்தல் ஆணையத்துக்கு எதிராக வாக்காளர் உரிமை யாத்திரை என்ற பேரணியில் பீகாரில் ராகுல் காந்தி பேரணியை தொடங்கியுள்ளார். இந்தப் பேரணியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.
தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை மற்றும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த நடவடிக்கைக்கு எதிராக ராகுல் காந்தி 'வாக்காளர் அதிகாரம்' என்கிற பெயரில் பேரணியை நடத்தி வருகிறார். பீகார் முழுக்க பயணிக்கும் அவர் மக்களை களத்தில் சென்று சந்தித்து தேர்தல் ஆணையம் மீதான தனது குற்றச்சாட்டுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்.

பீகாரில் ராகுல்காந்தி தலைமையில் நடைபெறும் இந்தப் பேரணியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று பங்கேற்க உள்ளார். இதற்காக அவர், சென்னையில் இருந்து இன்று காலை 7.30 மணியளவில் சிறப்பு விமானம் மூலம் பீகார் புறப்பட்டு சென்றார்.
பீகார் சென்ற முதல்வர் ஸ்டாலின், தர்பங்கா விமான நிலையத்தில் இருந்து சாலைமார்க்கமாக சென்று ராகுல்காந்தி பேரணியில் கலந்துகொண்டார். திறந்த ஜீப்பில் ராகுல் காந்தியுடன் முதல்வர் ஸ்டாலின் ஊர்வலமாக சென்றார்.
ராகுல் காந்தியின் பேரணியில் முதல்வர் ஸ்டாலினுடன் திமுக எம்பி கனிமொழி, காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி, ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பேரணி நிறைவடையும் பகுதியில் பொதுக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் பங்கேற்றுப் பேசவுள்ளார்.
அதைத்தொடர்ந்து, அங்கிருந்து புறப்படும் முதல்வர் ஸ்டாலின், மதியம் 2 மணியளவில் தர்பங்கா விமான நிலையத்துக்கு வருகிறார். அங்கிருந்து சிறப்பு விமானம் மூலமாக மாலை 4.30 மணியளவில் சென்னை திரும்பவுள்ளார்.
ராகுல் காந்தி மற்றும் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான இந்த 'வாக்காளர் அதிகாரம் யாத்திரை' 16 நாள் நடக்கிறது. செப்டம்பர் 1-ம் தேதி பாட்னாவில் யாத்திரை நிறைவடைகிறது. இந்த யாத்திரை மாநிலத்தின் 20 மாவட்டங்களில் 1,300 கி.மீட்டருக்கும் அதிகமான தூரத்தை கடக்கும். விரைவில் பீகாரில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் இந்த யாத்திரை மிகுந்த கவனம் பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications