தூங்கும் போது பாம்பு கடித்தது... விஷம் கலந்த தாய்ப்பால் கொடுத்ததால் தாயுடன் குழந்தையும் பலி
பாம்புக் கடித்ததால் விஷம் கலந்த தாய்ப்பால் குடித்து தாயுடன் சேர்ந்து குழந்தையும் பலியானது.
Recommended Video
முசாபர்நகர்: உத்தரப்பிரதேசத்தில் பாம்பு கடித்தது தெரியாமல் குழந்தைக்கு பால் கொடுத்ததால், தாயும், குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
உத்தரப்பிரதேச மாநிலம், முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ளது மண்டலா கிராமம். அங்கு வசித்து வந்த 35 வயது பெண் ஒருவர், நேற்று இரவு வீட்டில் தனது இரண்டரை வயது குழந்தையுடன் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவில் அப்பெண்ணை பாம்பொன்று கடித்துள்ளது. ஆனால், இதனை அப்பெண் அறியவில்லை. இதனால் கொஞ்சம் கொஞ்சமாக பாம்பு விஷம் அவரது உடல் முழுவதும் பரவியுள்ளது.
இதனிடைடே, குழந்தை பசியால் அழவே, அப்பெண் உறக்கத்திலேயே அதற்கு தாய்ப்பால் கொடுத்துள்ளார். இதனால், விஷம் தாய்ப்பால் வழியாக அக்குழந்தையின் உடலுக்கும் பரவியது.
விஷத்தின் தீவிரத்தால் சிறிது நேரத்தில் இருவரின் உடல்நிலையும் ஆபத்தான நிலைக்குச் சென்றது. உடனடியாக அவர்கள் இருவரையும் உறவினர்கள் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இருவரும் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் குறித்து முசாபர்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாயும், குழந்தையும் தூங்கிக் கொண்டிருந்த அறைக்கு அடுத்த அறையில் பாம்பு ஒன்றைக் கண்டதாகவும், ஆனால் அதனை பிடிப்பதற்குள் அது தப்பிவிட்டதாகவும் அவரது உறவினர்கள் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் சுமார் 300க்கும் அதிகமான பாம்பு வகைகள் உள்ளன. அவற்ரில் அறுபதுக்கும் மேற்பட்டவை கொடிய விஷத்தன்மை உள்ளவை. கடந்த 2011ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வின்படி, உலகளவில் ஆண்டுதோறும், சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமாக பேர் பாம்புக் கடிக்கு பலியாகின்றனர். இதில் இந்தியாவில் மட்டும் சுமார் 46 ஆயிரம் பேர் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.