இந்தியாவில் தாக்குதல் நடத்த வடகிழக்கு மாநில தீவிரவாதிகளுக்கு பயிற்சி, ஆயுதம் தரும் சீனா!
கோஹிமா: இந்தியாவில் தாக்குதல்களை நடத்த வடகிழக்கு மாநிலங்களில் தனிநாடு கோரி வரும் தீவிரவாதிகளுக்கு சீனா ஆயுதமும் பயிற்சியும் அளித்து வருவது அம்பலமாகி உள்ளது. மியான்மர் எல்லை பகுதியை புதிய போர் முனையாக்க சீனா முயற்சிப்பதையே இது வெளிப்படுத்துகிறது.
லடாக், அருணாச்சல பிரதேசம், பூட்டான் எல்லைகளில் குடைச்சல் கொடுத்து வரும் சீனா இப்போது வடகிழக்கு மாநிலங்களை குறிவைத்துள்ளது. மியான்மர் எல்லையில் தீவிரவாத குழுக்களுக்கு ஆயுதங்களையும் பயிற்சிகளையும் சீனா கொடுத்து வருகிறது.

வடகிழக்கு மாநிலங்கள்
இந்தியாவில் தாக்குதல் நடத்தும் வகையில் புதிய போர் முனையாக வடகிழக்கு மாநிலங்களை சீனா தேர்வு செய்திருக்கிறது. வடகிழக்கு மாநிலங்களில் பல்வேறு தனிநாடு கோரும் தீவிரவாத குழுக்கள் இயங்கி வருகின்றன.

பயிற்சி கொடுத்த சீனா
இந்த குழுக்களை மத்திய அரசு தடை செய்துள்ளது. இதேபோல் மியான்மர் ஆயுத குழுக்களான United Wa State Army, Arakan Army ஆகியவற்றையும் மத்திய அரசு தடை செய்துள்ளது. இந்த நிலையில்தான் இந்தியாவால் தேடப்படும் 4 பயங்கரவாத இயக்கங்களின் தலைவர்களுக்கு தெற்கு சீனாவின் குன்மிங் நகரில் ஆயுத பயிற்சி வழங்கப்பட்டதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நாகா தீவிரவாதிகள்
நாகாலாந்து தனிநாடு கோரும் குழுக்களின் தலைவர்களும் சீனாவின் இந்த ஆயுத பயிற்சியில் பங்கேற்றனர். இவர்களில் 4 பேர் இந்தியாவால் தேடப்படும் பயங்கரவாத இயக்கங்களின் தலைவர்கள். கடந்த அக்டோபர் மாதம் சீனா இந்த பயிற்சியை கொடுத்திருக்கிறது. இந்த பயங்கரவாத தலைவர்கள், சீனா ராணுவத்தின் ஓய்வு பெற்ற, தற்போதைய அதிகாரிகளை சந்தித்து ஆயுத உதவிகளை பெற்றிருப்பதும் உறுதியாகி உள்ளது.

எல்லையில் தீவிர கண்காணிப்பு
கடந்த அக்டோபர் 21-ந் தேதி மியான்மர் எல்லையில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் தீவிரவாதிகள் தாக்குதலில் வீரமரணம் அடைந்தார். இதனையடுத்து 1,000-க்கும் அதிகமான ராணுவ வீரர்கள் மியான்மர் எல்லையில் கண்காணிப்பு மற்றும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் வழக்கம் போல சீனா, வடகிழக்கு மாநில தீவிரவாதிகளுக்கு எந்த ஆயுத உதவியும் செய்யவில்லை என மறுத்தும் வருகிறது.












Click it and Unblock the Notifications