நொய்டா ஆபீசில் சம்பவம்.. இந்திய தேசிய கொடியை கிழித்து எறிந்த சீன அதிகாரி.. சிக்கலில் ஓப்போ நிறுவனம்
இப்பிரச்சினையை அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. உரிய வகையில் பிரச்சினை சரியாகும் என எதிர்பார்க்கிறோம் என்றார் சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர்.
நொய்டா: சீனாவின் ஸ்மார்ட்போன் நிறுவனமான ஓப்போவின் நொய்டா தொழிற்சாலையில் பணிபுரியும் சீன உயர் அதிகாரி ஒருவர், இந்திய தேசியக் கொடியை கிழித்து, குப்பைத் தொட்டியில் வீசியதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த நிறுவனத்தில் பணியாற்றும் இந்திய ஊழியர்கள், உள்ளூர் மக்களுடன் சேர்ந்து அலுவலகம் எதிரே பெரும் போராட்டத்தில் குதித்தனர்.

சமூக வலைத்தளம் மூலமாக போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். போராட்டக்காரர்களால் தொழிற்சாலை முழுவதும் இந்திய தேசியக் கொடி நிறுவப்பட்டது, கொடியை அவமதித்த அதிகாரியை மன்னிப்பு கேட்க போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர். ஆனால் அதிகாரி மன்னிப்பு கேட்க மறுக்கவே பாரத் மாதா கீ ஜே என்ற கோஷத்துடன், அவரையும் முற்றுகையிட்டனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நிலையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரி மீது, தேசிய கொடியை அவமதித்ததற்காக, வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதன்பிறகே போராட்டக்காரர்கள் அங்கிருந்து சென்றார்கள்.
தேசியக் கொடி அவமதிப்பு தொடர்பாக விசாரிக்க வசதியாக ஆபீசிலுள்ள, சிசிடிவி காட்சிகளை பெற்றுள்ளது காவல்துறை.
இதனிடையே சீன வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் லு கங் கூறுகையில், சீன நாட்டு வர்த்தகர்கள், தொழிலாளர்கள் எந்த நாட்டில் இருக்கிறார்களோ அந்த நாட்டு சட்ட திட்டத்தை மதிக்க வேண்டும் என்பதே சீன அரசின் அறிவுறுத்தலாக இருந்து வருகிறது. இப்பிரச்சினையை அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. உரிய வகையில் பிரச்சினை சரியாகும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.












Click it and Unblock the Notifications