எல்லை தாண்டி இந்தியாவுக்குள் ஊடுருவிய சீன ராணுவத்தினரை விரட்டியடித்த லடாக் கிராமத்தினர்
லடாக்: இந்திய எல்லைக்குள் சாதாரண உடையில் ஊடுருவிய சீன ராணுவத்தினரை லடாக் அருகே பாதுகாப்பு படையினருடன் சேர்ந்த கிராமத்தினர் விரட்டியடித்தனர்.
இந்தியா சீனா இடையே கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி கடந்த 8மாதங்களாக மோதல் போக்கு நிலவுகிறது. குறிப்பாக கடந்த ஜூன் மாதம் இந்திய எல்லைக்குள் அத்துமீறி ஊடுருவிய சீன வீரர்களுக்கும் அதை தட்டிக்கேட்ட இந்திய வீரர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.
சீன ராணுவம் தரப்பிலும் உயிரிழப்பு அதிகம் என்று கூறப்படுகிறது. ஆனால் வெளிப்படையாக சீனா எத்தனை வீரர்கள் இறந்தார்கள், எத்தனை பேர் காயம் அடைந்தார்கள் என்ற தகவலை வெளியிடவில்லை.
இருநாட்டு ராணுவ வீரர்கள் மோதிக்கொண்ட பிறகு எல்லையில் போர் ஏற்படும் அபாயம் எழுந்தது. ஆனால் ஆனால் இந்த விவகாரம் தொடர்பாக இருநாட்டு ராணுவ உயரதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு அமைதி ஏற்படுத்தப்பட்டது. எனினும் அவ்வப்போது சீன வீரர்கள் அத்துமீற முயற்சிப்பது தொடர்கதையாக உள்ளது.

சாமனியர் போல் உடை
காஷ்மீரின் லேவுக்கு கிழக்கே லடாக்கின் சங்க்தாங் கிராமத்தில் இரண்டு வாகனங்களில் சீன ராணுவ வீரர்கள் இந்திய எல்லையை தாண்டி வந்துள்ளார்கள். சீன வீரர்கள் ராணுவ உடையின்றி சாமானியர்களைப் போன்று உடை அணிந்து வந்ததால் சந்தேகம் எழவில்லை.

சீன ராணுவம்
எனினும் உள்ளூர் மக்கள் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றபோது அவர்களை அனுமதிக்க சீன வீரர்கள் மறுத்திருக்கிறார்கள். இதனை தொடர்ந்து கிராம மக்கள் இந்தோ-திபெத் எல்லைப்பாதுகாப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

விரட்டியடிப்பு
பாதுகாப்பு படையினர் வந்ததும், சாதாரண உடையில் இருப்பவர்கள் சீன ராணுவத்தினர் என்பதை அடையாளம் கண்டு கொண்டார்கள். இதனை அடுத்து பாதுகாப்பு படையினரும், கிராமமக்களும் சேர்ந்து விரட்டியததால் சீன வீரர்கள் திரும்பி செல்ல வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டனர்.

பிடிப்பட்ட வீரர்
சீனா வீரர்கள் இரண்டு வாகனங்களில் பொதுமக்கள் உடையணிந்து வருவதும், அவர்கள் கிராமத்திற்குள் நுழைவது குறித்த வீடியோ காட்சியானது சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. சமீபத்தில், இந்தியாவிற்குள் எல்லைதாண்டி வந்த சீன ராணுவ வீரர் பிடிபட்டார். விசாரணையில் வழிதவறி வந்த காட்டெருமையை மீட்பதற்காக வந்ததாக கூறினார்.












Click it and Unblock the Notifications