20 தமிழர்களை திட்டமிட்டுக் கொன்றுள்ளது ஆந்திர போலீஸ் - தேசிய பழங்குடியினர் ஆணையம் அறிக்கை
Subscribe to Oneindia Tamil
டெல்லி: சித்தூர் மாவட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 20 மரம் வெட்டும் தொழிலாளர்களை சுட்டுக் கொன்ற ஆந்திர அதிரடிப்படையினரின் செயல் நியாயமற்றது, நெறிமுறைகளுக்குப் புறம்பானது, சட்டவிரோதமானது, ஈவு இரக்கமற்றது. இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தியாக வேண்டும். அப்போதுதான் நியாயம் கிடைக்கும் என்று தேசிய பழங்குடியினர் ஆணையம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஆணையத்தின் துணைத் தலைவர் ரவிக்குமார் தாக்கூர் தலைமையிலான குழு சம்பவம் நடந்த இடத்தை சமீபத்தில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தது. தற்போது இந்தக் குழு தனது அறிக்கையை அளித்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
- சாதாரண மரக் கட்டைகளைத் திருடினார்கள் என்பதுதான் கொல்லப்பட்ட 20 பேர் மீதான முக்கியப் புகாராகும்.
- மரக் கட்டைகளைத் திருடியவர்களுக்கு மரணம்தான் தண்டனை என்பது மிகக் கொடுமையானது, அதி தீவிரமானது.
- மரக் கட்டைகளைப் பறிமுதல் செய்து, கைது செய்திருந்தாலே போதுமானது. அதுதான் சரியான நடவடிக்கையாக இருந்திருக்கும்.
- ஒரு மரக் கட்டையை விட உயிரின் விலை மிகப் பெரியது.
- இந்த சம்பவத்தில் எந்தவிதமான நெறிமுறைகளையும் அதிரடிப்படை கடைப்பிடிக்கவில்லை.
- உரிய அதிகாரிகளுக்கு அவர்கள் தகவல் தெரிவிக்கவும் இல்லை.
- ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் சட்டசபைத் தொகுதிக்குட்பட்ட இடத்தில் இந்த சம்பவம் நடந்த இடம் வருகிறது.
- முதல்வரின் தொகுதி என்பதால் அதிகாரிகளும், காவல்துறையினரும் மிகுந்த கவனத்துடன் இருந்திருக்க வேண்டும்.
- இரு மாநிலம் சம்பந்தப்பட்ட பிரச்சினை என்பதால் கூடுதல் கவனத்துடன் அதிரடிப்படையினரும், அதிகாரிகளும் செயல்பட்டிருக்க வேண்டும்.
- தமிழக காவல்துறையினருக்கும் இதுகுறித்து தெரிவித்து அவர்களையும் தங்களுடன் இணைத்து செயல்பட்டிருக்கலாம்.
- கொல்லப்பட்டவர்களில் 13 பேர் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். அவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
- சம்பவம் நடந்த இடத்தில் ஒரு சிறிய செம்மரம் கூட காணப்படவில்லை. காடு போலவே அது இல்லை. சாதாரண புதர்கள்தான் இருந்தன.
- 9 பேரை ஒரு இடத்திலும், 11 பேரை இன்னொரு இடத்திலும் கொன்றதாக தெரிவிக்கப்பட்டது.
- ஆனால் அனைவரும் ஒரே இடத்தில் கொல்லப்பட்டதாகவே நான் கருதுகிறேன்.
- இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும். அப்போதுதான் நியாயம் கிடைக்கும் என்று ரவிக்குமார் தாக்கூர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications