கர்நாடகத்தில் சிக்கிய 2 பேர்... பெங்களூரு சர்ச் சாலை குண்டுவெடிப்பில் தொடர்பா?.. தீவிர விசாரணை
பெங்களூரு: பெங்களூர் சர்ச் சாலையில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக கர்நாடக மாநிலம் பத்கல் நகரைச் சேர்ந்த இருவரைக் கைது செய்துள்ள தேசிய புலனாய்வு அமைப்பினர் அவர்களை பெங்களூர் மத்திய குற்றப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். அவர்களிடம் தற்போது பெங்களூர் குற்றப் பிரிவு போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நடந்து 2 வாரங்களுக்கு மேலாகி விட்ட பெங்களூர் சர்ச் சாலை குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக யாரும் சிக்காமல் இருந்து வந்தனர். இந்த நிலையில் பத்கலைச் சேர்ந்த சதாம் மற்றும் முகம்மது ஆசிப் ஆகிய இருவரை தேசிய புலனாய்வு ஏஜென்சியினரும், ஐபியும் சேர்ந்து நடத்திய வேட்டையில் பிடித்துள்ளனர். இருவரும் தற்போது பெங்களூர் மத்திய குற்றப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து இருவரிடமும் குற்றப் பிரிவு போலீஸார் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
ஏராளமான வெடிபொருட்கள்:
பிடிபட்ட இருவரும் பத்கலைச் சேர்ந்தவர்கள். இவர்களைக் கைது செய்தபோது அவர்களிடம் ஏராளமான வெடிபொருட்கள் இருந்துள்ளன. அதாவது டெட்டனேடேடர்கள், டைமர்கள் ஆகியவை இருந்தன.
இவர்கள் இருவரும் எந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது இதுவரை தெரியவில்லை. அவர்களிடம் விசாரணை தொடர்கிறது. விவரம் கிடைத்தால் தெரிவிப்போம் என்று ஒன்இந்தியாவிடம் மத்திய குற்றப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் சிலர் தெரிவித்துள்ளனர்.
பலரிடம் விசாரணை:
முன்னதாக இந்த வெடிகுண்டுச் சம்பவம் தொடர்பாக பலரைப் பிடித்து போலீஸார் விசாரித்து வந்தனர். விசாரணை நத்தை வேகத்தில்தான் போய்க் கொண்டிருந்தது. பீகாரில் ஒருவரைப் பிடித்தும் விசாரித்தனர். இருப்பினும் உருப்படியான தகவல் கிடைக்கவில்லை.
அதேசமயம், சம்பந்தப்பட்ட இடத்தில் இருந்தவர்கள் கூறிய தகவல்கள், சிசிடிவி கேமரா படங்கள் ஆகியவற்றை வைத்து வரைபடம் தாயரிக்கும் பணியிலும் போலீஸார் ஈடுபட்டு வந்தனர். குண்டு வைத்த நபர் சம்பந்தப்பட்ட இரவில், கருப்பு துணியுடன் இருந்ததாக மட்டும் தெரிய வந்தது.
மேலும், இந்த நபர் கந்தவா சிறையிலிருந்து தப்பிய ஐவரில் ஒருவரா என்பது குறித்து மத்தியப் பிரதேச போலீஸாருடனும் பெங்களூரு போலீஸார் ஆலோசனை நடத்தி வந்தனர். ஆனால் அவர்களோ சிறையிலிருந்து தப்பிய சிமி கும்பலைச் சேர்ந்தவர்களைப் போல இவர் இல்லை என்று கூறி விட்டனர்.
இந்த நிலையில்தான் பத்கலைச் சேர்ந்த இருவர் சிக்கியுள்ளனர். அவர்களிடம் நடத்தப்படும் விசாரணைக்குப் பின்னரே அவர்களுக்கு இந்த சம்பவத்தில் தொடர்பு உள்ளதா என்பது குறித்துத் தெரிய வரும்.