ராஜிவ்காந்தி கொல்லப்படுவதை 5 வருடம் முன்பே கணித்த சி.ஐ.ஏ.. அறிக்கை வெளியானதால் அம்பலம்
டெல்லி: ராஜிவ்காந்தி தமிழகத்தில் கொலை செய்யப்படும் முன்பே அவரது உயிருக்கு ஆபத்து இருந்தது என்பதை அமெரிக்க புலனாய்வு அமைப்பான சி.ஐ.ஏ தெரிந்து வைத்துள்ளது.
'இந்தியா ராஜிவுக்கு பிறகு' என்று தலைப்பிட்ட 23 பக்க ரிப்போர்ட்டில் இதுகுறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ள தகவல் தற்போது வெளியே வந்துள்ளது. இந்த அறிக்கை 1986லேயே தயாரிக்கப்பட்டது கவனிக்கத்தக்கது. ராஜிவ்காந்தி, தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதூரில் 1991ம் ஆண்டு மே 21ம் தேதி கொலை செய்யப்பட்டார். ஆனால் இப்படி ஒரு அறிக்கையை சி.ஐ.ஏ அவர் கொல்லப்படுவதற்கு 5 வருடங்கள் முன்பே தயாரித்துள்ளது.
அந்த அறிக்கையில், சீக்கியர் அல்லது காஷ்மீர் முஸ்லிம்களால் ராஜிவ்காந்தி கொலை செய்யப்பட்டால், நாடு முழுக்க பெரும் இன அல்லது மதக் கலவரங்கள் வெடிக்கும். அதை ராணுவம் அல்லது துணை ராணுவத்தை கொண்டு வந்தால் கூட கட்டுப்பட்ட முடியாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ராஜிவ்காந்தி கொலை செய்யப்பட்ட பிறகு, பி.வி.நரசிம்மராவ் அல்லது வி.பி.சிங் ஆகிய இருவரில் ஒருவர் பிரதமர் பதவிக்கு உடனடியாக நியமிக்க தகுதியானவர்களாக இருப்பார்கள் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு்ள்ளது.
இந்த அறிக்கையின் ஒரு பிரிவில், படுகொலை அச்சுறுத்தல் என்ற தலைப்பில், அடுத்த சில ஆண்டுகளில் ராஜிவ் காந்தி கொலை செய்யப்பட வாய்ப்புள்லது. காஷ்மீர் முஸ்லிம்கள் அல்லது சீக்கிய தீவிரவாதிகளால் இந்த கொலை நிகழ வாய்ப்புள்ளது. ஒரு இந்து மத வெறியராலும் கொலை நடைபெற வாய்ப்புள்ளது என்றும் சி.ஐ.ஏ குறிப்பிட்டுள்ளது.
இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், ராஜிவ்காந்தி அடுத்த சில ஆண்டுகளில் கொலை செய்யப்படுவார் என்று முன்கூட்டியே கணித்த சி.ஐ.ஏவால், அந்த கொலை விடுதலை புலிகள் தரப்பிலிருந்து முன்னெடுக்கப்பட உள்ளது என்பதை கணிக்க முடியவில்லை. அந்த அறிக்கையில் விடுதலை புலிகள் குறித்த அம்சம் எதுவுமே இடம்பெறவில்லை.
இந்த அறிக்கையில், தமிழர்கள்-சிங்களர்கள் நடுவேயான பிரச்சினையில் ராஜிவ்காந்தி தலையிட்ட விதம் குறித்து சில அம்சங்கள் உள்ளனவாம். ஒருவேளை விடுதலை புலிகள் அச்சுறுத்தல் இருப்பது குறித்து சி.ஐ.ஏ குறிப்பிட்டு தற்போது அது நீக்கப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
ராஜிவ் கொலையானால் அது இந்திய-அமெரிக்க உறவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், தேசியவாதம் பேசும் கட்சிகள் ஆட்சியை பிடித்துவிட வாய்ப்பு உள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், ராணுவம் ஆட்சியை கைப்பற்ற வாய்ப்பே இள்லை என்றும் அந்த அறிக்கை திட்டவட்டமாக கூறியுள்ளது. சி.ஐ.ஏ 1986ல் தயாரித்த அறிக்கை தற்போது கசிந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.