அசாமில் சிஏஏ சட்டம் அமலாகாது.. குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2000! ராகுல் காந்தி அதிரடி அறிவிப்புகள்
குவஹாத்தி: அசாம் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால், வீட்டிலுள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதத்திற்கு ரூ .2,000 உரிமைத் தொகை வழங்குவதாக அறிவித்துள்ளார் ராகுல் காந்தி. இது மட்டுமல்லாமல், டெல்லி பாணியில் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்குவதாகவும் அறிவித்துள்ளார்.
தேயிலைத் தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஒரு நாளைக்கு ரூ .365 ஊதியம் வழங்கப்படும் என்றும் தனது வாக்குறுதியில் அவர் கூறினார்.

ராகுல் தனது அறிவிப்பில் மற்றொரு முக்கிய அறிவிப்பையும் வெளியிட்டார். அதாவது காங்கிரஸ் அரசு ஆட்சியமைத்தால், சி.ஏ.ஏ எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அசாமில் செயல்படுத்தாது என்றார்.
மேலும் 5 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்படும் என்றும் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி குறிப்பிட்டார். ஆக மொத்தம் 5 முக்கிய அறிவிப்புகளை அவர் இன்று வெளியிட்டார். இது மட்டுமல்லாமல், தேயிலைத் தோட்டத் தொழிலுக்கு தனி அமைச்சகத்தை அமைப்பதாகவும் ராகுல் காந்தி உறுதியளித்தார்.
மேலும், ராகுல் காந்தி சபுவாவில் உள்ள தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் உரையாடி அவர்கள் பிரச்சினைகளை கேட்டறிந்தார்.
பின்னர் டின்சுகியா மாவட்டத்தில் நடந்த பேரணியில் உரையாற்றினார்.
சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் அசாம் மாநிலத்தில் தலைவர்களின் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. நேற்று பிரதமர் மோடி அசாமில் பிரசாரம் செய்த நிலையில், இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரசாரம் மேற்கொண்டார்.
126 தொகுதிகளை கொண்ட அசாம் மாநிலத்தில் 3 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்ட தேர்தல் மார்ச் 27ம் தேதி 47 தொகுதிகளுக்கும், இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 1ம் தேதி 39 தொகுதிகளுக்கும், முன்றாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி 40 தொகுதிகளுக்கும் நடைபெற உள்ளது. மே 2ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications