உண்மை என்பதற்கு நிறம் கிடையாது.. பிரிவு உபசரிப்பு விழாவில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா உருக்கம்!
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா பதவிக் காலம் முடிவதை அடுத்து இன்று மாலை முக்கியமான சந்திப்பு கூட்டம் ஒன்றை நடத்த இருக்கிறார்.
டெல்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா பிரிவு உபசரிப்பு விழாவில் மிகவும் உருக்கமாக பேசியுள்ளார்.
தற்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் பதவிக்காலம் வரும் அக்டோபர் 2ம் தேதியோடு முடிவடைகிறது. இதையடுத்து தற்போது தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதி ரஞ்சன் கோகாய் பெயரை பரிந்துரை செய்துள்ளார்.
இதனால் இன்று உச்ச நீதிமன்றத்தில் சில முக்கியமான நிகழ்வுகள் நடந்தது. முத்தாய்ப்பாக இன்று மாலை பெரிய கூட்டம் ஒன்று நடந்தது.
எப்போது பதவி ஏற்பு
நீதிபதி ரஞ்சன் கோகாயை தலைமை நீதிபதியாக அறிவிக்க வேண்டும் என்ற ஏற்கனவே ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது. தற்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் பரிந்துரையை சட்ட அமைச்சகம் ஏற்கனவே ஏற்றுக்கொண்டுவிட்டது. இந்த நிலையில் அக்டோபர் 3ம் தேதி ரஞ்சன் கோகாய் தலைமை நீதிபதியாக பதவி ஏற்க இருக்கிறார்.
காலை நடந்த கூட்டம்
இன்று காலை நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் நிறைந்த கூட்டம் ஒன்று நடைபெற்றது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா இதில் பேசினார். இந்த கூட்டம் மிகவும் உணர்வுபூர்வமாக இருந்தது. கடந்த வருடங்களில் எப்படி எல்லாம் வாழ்ந்தார் என்பதை தலைமை நீதிபதி குறிப்பிட்டார். அவரது பேச்சு முழுக்கவே உணர்ச்சிகரமாக இருந்ததாக நீதிபதிகள் தெரிவிக்கிறார்கள்.
பாடல் பாடினார்
இந்த நிலையில் அவர் பேசிக்கொண்டு இருக்கும் போதே வழங்கறிஞர் ஒருவர் எழுந்து நின்று தலைமை நீதிபதிக்காக பாடல் ஒன்று பாடினார். ஹிந்தி பாடலான ''தும் ஜியோ ஹஸ்ரான்'' என்ற பாடலை பாடினார். இது பிறந்த நாள் அப்போது வழக்கமாக பாடப்படும் ஹிந்தி பாடல் ஆகும். இந்த பாடல் முடிந்ததும் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அந்த வழக்கறிஞரை கட்டிப்பிடித்தார்.
பேசினார்
இந்த நிலையில் காலையில் மனதிலிருந்து பேசிவிட்டேன், மாலை மூளையிலிருந்து பேசுவேன் என்று தலைமை நீதிபதி இதுகுறித்து குறிப்பிட்டு இருந்தார். தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா பிரிவு உபசரிப்பு விழாவில் மிகவும் உருக்கமாக பேசியுள்ளார்.அவர் தனது பேச்சில், உண்மை என்பதற்கு நிறம் கிடையாது. உண்மை என்பது நாம் நினைப்பது கிடையாது. நீதிக்கு மனித முகம் இருக்கிறது. நீதிக்கு மனித உருவம் இருக்கிறது. பார் கவுன்சில் உள்ள இளைஞர்கள்தான் நீதித்துறையின் எதிர்காலம். எந்த அளவிற்கு வயதானவர்களின் அனுபவத்தை மதிக்க வேண்டுமோ அதே அளவிற்கு இளைஞர்களின் திறமையையும் மதிக்க வேண்டும்.
நீதி
இதுவரை நான் யாரையும் அவர்களது வரலாற்றை வைத்து தீர்ப்பு வழங்கியது இல்லை. நான் அவர்களின் செயல்பாட்டையும், ஒரு விஷயத்தை அவர்கள் எப்படி பார்க்கிறார்கள் என்பதை வைத்தும்தான் நான் தீர்ப்பு வழங்குவேன். ஒருவரின் கடந்த காலம் அவர்களின் நிகழ்காலத்தை தீர்மானிக்காது.
நீதித்துறை முக்கியம்
நாம் என்ன சாப்பிட வேண்டும், என்ன உடை உடுத்த வேண்டும் ஆகியவை இப்போது சாதாரண விஷயம் இல்லை. அது அரசியலாகி உள்ளது. அது நம்மை பிரிக்கிறது. இந்த சூழ்நிலையில்தான் நீதித்துறையின் அவசியம் அதிகமாகிறது. நீதிபதிகள் வழங்கிய தீர்ப்புகளை வைத்து அவர்களை நாம் விமர்சிக்க கூடாது, என்று குறிப்பிட்டார்.