பீகார் சட்டசபை தேர்தல்: பாஸ்வான் - மாஞ்சி குடுமிபிடி மோதலால் கவலையில் பா.ஜ.க. கூட்டணி!
பாட்னா: பீகார் சட்டசபை தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் தங்களது கூட்டணியில் இடம்பெற்றுள்ள மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் மற்றும் முன்னாள் முதல்வர் மாஞ்சி இடையேயான மோதல் பாரதிய ஜனதா கட்சியை பெரும் கவலை அடைய செய்துள்ளது.
பீகாரில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வானின் லோக் ஜனசக்தி, மத்திய அமைச்சர் உபேந்திராவின் ராஷ்டிரிய லோக் சமதா கட்சி மற்றும் முன்னாள் முதல்வர் மாஞ்சியின் ஹிந்துஸ்தானி அவாம் மோர்சா ஆகியவை இடம்பெற்றுள்ளன.
அதாவது நிதிஷ் குமார், லாலு பிரசாத் யாதவ் ஆகியோர் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களது தலைமையிலான கூட்டணிக்கு எதிராக தலித் சமூகத்தின் மாஞ்சி, ராம்விலாஸ் பாஸ்வான் உள்ளிட்டோரை கொண்ட அணியை பா.ஜ.க. உருவாக்கியுள்ளது. ஆனாலும் பாஸ்வான், மாஞ்சி இடையேயான மோதல் பா.ஜ.க.வை அலற வைத்துள்ளது.
பாஸ்வான் மீது தாக்கு
மாஞ்சியைப் பொறுத்தவரையில் பாஸ்வான் குடும்ப அரசியல் நடத்துகிறார்; மகனை முன்னிறுத்தி அரசியல் செய்கிறார் என்று பகிரங்கமாக குற்றம்சாட்டி வருகிறார். அதே நேரத்தில் பாஸ்வானும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மாஞ்சி இடம்பெறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்துகளைத் தெரிவித்து வருகிறார்.
நாட்டாமை அனந்தகுமார்
இந்த மோதலுக்கு முடிவுகட்டும் வகையில் 'நாட்டாமையாக' மத்திய அமைச்சர் அனந்த குமாரை களமிறக்கியுள்ளது பா.ஜ.க. மேலிடம். அனந்தகுமாரும் மாஞ்சியை நேரில் சந்தித்து, கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஒரு கட்சியின் தலைவரை பகிரங்கமாக விமர்சிப்பது சரியல்ல என்று கூறியிருக்கிறார். இதனைத் தொடர்ந்து பாஸ்வான், மாஞ்சியை பா.ஜ.க. தலைவர் அமித்ஷாவுடன் சந்திக்க வைப்பதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இடஒதுக்கீட்டிலும்...
இதோடு முடிந்துவிடவில்லை உள்குத்து.. தொகுதி ஒதுக்கீட்டிலும் இடியாப்பச் சிக்கலை எதிர்கொண்டிருக்கிறது பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி...
பீகார் சட்டசபையில் ஒரு எம்.எல்.ஏ. கூட இல்லாத கட்சியெல்லாம் (பாஸ்வான்) 75 சீட்டை கேட்கிறது.. இதன்படி பார்த்தால் எங்களுக்கு 13 எம்.எல்.ஏக்கள் இருக்கிறார்கள் எனில் எத்தனை இடங்களில் நாங்கள் போட்டியிட வேண்டும் என பார்த்துக் கொள்ளுங்கள் என்று கொளுத்திப் போட்டிருக்கிறார் மாஞ்சி.
முதல்வர் வேட்பாளர்
இதேபோல் முதல்வர் வேட்பாளர் யார் என்பதிலும் பீகார் பா.ஜ.க.வுக்குள் வெட்டு குத்து நடக்கிறது. இந்த களேபரத்தை சில மாதங்களுக்கு முன்னரே தொடங்கி வைத்த பெருமை சத்ருஹன் சின்ஹாவுக்கே சேரும். இந்த முதல்வர் வேட்பாளர் விவாதம் இன்னும் பீகார் பா.ஜ.க.வில் ரணகளமாகத்தான் இருக்கிறது...
லோக்சபா தேர்தலைப் போலவே சட்டசபை தேர்தலிலும் வாகை சூடலாம் என விரும்பினாலும் இத்தகைய உள்மோதல்களால் தவியாய் தத்தளித்துக் கொண்டிருக்கிறது பீகார் பா.ஜ.க. என்பதே நிதர்சனம்..