கல்லூரி மாணவியை காதலிப்பதில் தகராறு.. 10ம் வகுப்பு மாணவரை குத்திக் கொன்ற சக மாணவன்
கல்லூரியில் படிக்கும் மாணவியை காதலிப்பதில் கொலையான ஹர்ஷா மற்றும் அருகேயுள்ள மற்றொரு பள்ளி மாணவர்கள் இடையே மோதல் இருந்துள்ளது, கொலைக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.
பெங்களூர்: கல்லூரி மாணவியை காதலிப்பதில் ஏற்பட்ட தகராறு காரணமாக பத்தாம் வகுப்பு மாணவர் ஒருவர் சக மாணவர்களால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெங்களூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூர் யலகங்கா பகுதியிலுள்ள அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தவர் ஹர்ஷா ராஜ் (15). இவரது தந்தை, நாராயணசாமி பால் வியாபாரம் செய்து வருகிறார். தாய் பெயர் அன்னபூர்ணா. சகோதரி, பிளஸ்டூ படித்து வருகிறார்.
நேற்று ஹர்ஷா படித்த பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்று வந்தது. சிறந்த விளையாட்டு வீரருக்கான விருது ஹர்ஷாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

கத்திக்குத்து
இந்நிலையில், விருது பெற்ற அரை மணி நேரத்திற்குள் மதியம் சுமார் 3 மணிக்கு, ஹர்ஷா கத்தியால் குத்துப்பட்டு பள்ளி காம்பவுண்டுக்கு வெளியே உயிருக்கு போராடி துடித்துக்கொண்டிருந்தார். அப்பகுதி மக்கள் சிலர் டிராபிக் போலீஸ்காரரை அழைத்து வந்து ஹர்ஷாவை ஆஸ்பத்திரிக்கு அனுப்பியுள்ளனர்.

பொதுமக்கள்
யலகங்கா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட ஹர்ஷா அங்கு சுமார் 20 நிமிடங்களில் உயிரிழந்தார். இதையடுத்து போலீசார் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் சிலர் கூறுகையில், சுமார் பத்து மாணவர்கள் ஒருவருக்கொருவர் சத்தமாக சண்டை போட்டுக்கொண்டதை பார்த்தோம். திடீரென அந்த இடம் அமைதியானது. ஹர்ஷா ரத்த வெள்ளத்தில், துடித்துக்கொண்டிருந்தார் என்று கூறியுள்ளனர்.

காதல் தகராறு
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், அருகேயுள்ள கல்லூரியில் படிக்கும் மாணவியை (கர்நாடகாவில் பிளஸ்1 முதலே கல்லூரி என்றே அழைக்கப்படும்) காதலிப்பதில் ஹர்ஷா மற்றும் அருகேயுள்ள மற்றொரு பள்ளி மாணவர்கள் இடையே மோதல் இருந்துள்ளது. சம்பவத்தின்போதும், காதல் விஷயம் குறித்து கடும் வாக்குவாதம் நடைபெற்றுள்ளது. அப்போது மற்றொரு பள்ளியை சேர்ந்த மாணவர்களில் ஒருவர், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து குத்தி கொலை செய்துள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அடிதடி
கொலை செய்தவரும் மைனர் என்பதால் இந்த வழக்கை மிகவும் ஜாக்கிரதையாக கையாளுவதாக போலீசார் தெரிவிக்கிறார்கள். கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா என்பது குறித்தும் போலீசார் விசாரிக்கிறார்கள். இந்த தாக்குதலில் இன்னொரு மாணவருக்கு காது கிழிந்துள்ளது. அவர் ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். அந்த மாணவர் குறித்து போலீசார் விவரம் சேகரித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications