செம்மொழி தமிழாய்வு நிறுவனம் மத்திய பல்கலைக்கழகத்துடன் இணைப்பா?- பிரகாஷ் ஜவடேகர் பதில்
செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தை மத்திய பல்கலைக் கழகத்துடன் இணைப்பது தொடர்பாக இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்
டெல்லி: செம்மொழி நிறுவனங்களை மத்திய பல்கலைக் கழகங்களுடன் இணைப்பது தொடர்பாக இதுவரை எந்த முடிவையும் அரசு இறுதி செய்யவில்லை என்று மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.
செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் சென்னை தரமணி தமிழ்நாடு அரசு சாலை போக்குவரத்து நிறுவன வளாகத்தில் இயங்கி வருகின்றது. இந்நிறுவனத்திற்கு தமிழ்நாடு அரசால் காஞ்சிபுரம் மாவட்டம், சோழிங்கநல்லூர், பெரும்பாக்கத்தில் 17 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு அந்நிலத்தில் மத்திய அரசின் பொதுப்பணித்துறை வாயிலாக கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழின் செவ்வியல் பரிணாமங்களை உலகுக்கு எடுத்துக்காட்டும் வகையில் முதுபெரும் தமிழறிஞர்களும், மூத்த ஆராய்ச்சியாளர்களும் இந்நிறுவனத்தின் வழியே உயர் ஆய்வு செய்து தமிழின் பெருமைகளை பறை சாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்துடன் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தை இணைப்பதற்கான முயற்சி நடைபெறுவதாக தகவல் வெளியானது. இதற்கு சட்டசபையிலும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விளக்கம் அளித்தார்.
இதனிடையே சில தினங்களுக்கு முன்பு தலைமைச் செயலகத்தில், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் ஐந்தாம் ஆட்சிக்குழு கூட்டம் நடைபெற்றது. செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம், திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் கொண்டுசெல்ல இருப்பதாக சமீபத்தில் ஊடகங்களில் செய்திகள் வந்தன. தமிழ்மொழியின் மேன்மையை ஆராய்ச்சி மூலம் உலகுக்குப் பகரும் இந்நிறுவனம், சென்னையில் இயங்குவதில் மாற்றம் செய்யக்கூடாது. எந்தக்காரணம் கொண்டும் அதன் தன்னாட்சி அமைப்பை இழக்கக்கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் தமிழ் வளர்ச்சிக்கு என புதுத்திட்டங்களை செயல்படுத்திச் செவ்வியல் தமிழ் இலக்கிய உயராய்வை மேலும் செம்மைப்படுத்துவதற்காக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.
இது குறித்து ராஜ்யசபாவில் கேட்கப்பட்ட கேள்விக்கு பிரகாஷ் ஜவடேகர் எழுத்து மூலமாக பதில் அளித்துள்ளார். அதில்,
செம்மொழி நிறுவனங்களை மத்திய பல்கலைக் கழகங்களுடன் இணைப்பது தொடர்பாக இதுவரை எந்த முடிவையும் அரசு இறுதி செய்யவில்லை. அனைத்து இந்திய மொழிகளையும் ஊக்குவிக்க வேண்டும் என்பதே அரசின் கொள்கையாகும் என்று கூறப்பட்டது.