ஹிமாச்சல பிரதேசத்தில் கனமழை.. தர்மசாலாவில் மேக வெடிப்பு... விடாது கொட்டிய மழையால் முடங்கிய வாழ்க்கை
விடாமல் கொட்டித்தீர்த்த கனமழையால் தர்மசாலாவில் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
சிம்லா: ஹிமாச்சல பிரதேச மாநிலம் தர்மசாலாவில் மேகத்திரள் வெடிப்பு ஏற்பட்டு கனமழை கொட்டித்தீர்த்தது. பெருவெள்ளம் காரணமாக சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் அடித்துச்செல்லப்பட்டன.

தென்மேற்குப் பருவமழை 10ஆம் தேதி முதல் வட மாநிலங்களில் தீவிரமடையும் என்று இந்திய வானிலை மையம் கணித்திருந்தது. நாட்டின் மிகமுக்கியமான சுற்றுலா தலமாக திகழும் ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் இடை விடாமல் கொட்டித்தீர்த்த கனமழை மக்களின் இயல்பு வாழ்க்கையை முடக்கியுள்ளது.
அங்குள்ள தர்மசாலாவில் மேக வெடிப்பு ஏற்பட்டு சிலமணிநேரங்களில் கொட்டித்தீர்த்த அதீத கனமழையால் பெருவெள்ளம் சூழ்ந்தது. சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் வெள்ளநீரில் இழுத்துச்செல்லப்பட்டன.
கடும் மழை வெள்ளத்தால் சிம்லா மாவட்டத்தின் ராம்பூர் பகுதியில் ஜாக்ரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது. ஜூலை 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் சமவெளி மற்றும் நடு மலைப்பகுதிகளில் கனமழை பெய்யும் என்று ஆரஞ்சு எச்சரிக்கையும், ஜூலை 14 மற்றும் 15 ஆம் தேதிகளுக்கு மஞ்சள் வானிலை எச்சரிக்கையும் இந்திய வானிலை மையம் வெளியிட்டிருந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாகவே ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. தொடர்மழை காரணமாக நிலச்சரிவு ஏற்படும் என்றும் ஆறுகளில் நீர்மட்டம் அதிகரிக்கும் என்பதால் சுற்றுலா பயணிகளும் பொதுமக்களும் ஆற்றங்கரையோரம் செல்ல வேண்டாம் என்றும் சிம்லா வானிலை மையம் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications