ஆந்திராவில் ட்விஸ்ட்.. மகள் ஷர்மிளாவுக்காக காங்., ஆதரவு.. முதல்வர் ஜெகன்மோகனை கைவிட்ட தாய் விஜயம்மா
அமராவதி: ஆந்திரா தேர்தலில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் தாய் விஜயம்மா காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். கடப்பா தொகுதியில் போட்டியிடும் தனது மகள் ஒய்எஸ் ஷர்மிளாவுக்கு ஓட்டளிக்கும்படி அவர் பரபரப்பான வீடியோவை வெளியிட்டுள்ளார். இது ஆந்திர அரசியலில் பெரும் பேசும்பொருளாகி உள்ளது.
ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி உள்ளார். ஆந்திராவில் நாளை மறுநாள் (மே 13) சட்டசபை தேர்தல் மற்றும் லோக்சபா தேர்தல் ஒன்றாக நடைபெற உள்ளது. அங்கு மும்முனை போட்டி நிலவுகிறது.

முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தனித்து களமிறங்குகிறது. காங்கிரஸ் கட்சி, இடதுசாரிகளுடன் கூட்டணி அமைத்துள்ளது. மாறாக முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், பாஜக மற்றும் நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியுடன் கூட்டணி அமைத்து களமிறங்கி உள்ளது.
இன்றுடன் ஆந்திராவில் தேர்தல் பிரசாரம் முடிவுக்கு வருகிறது. இதனால் ஆந்திராவில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரம் செய்தனர். இதற்கிடையே தான் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கை ஒய்எஸ் ஷர்மிளா காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவராக உள்ளார். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக தீவிர பிரசாரம் மேற்கொண்டு வந்தார். அதோடு ஒய்எஸ் ஷர்மிளா தனது குடும்பத்தின் பாரம்பரிய தொகுதியான கடப்பா லோக்சபா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் களமிறங்கி உள்ளார்.
இந்நிலையில் தான் மகன் ஜெகன்மோகன் ரெட்டி ஒரு பக்கம் (ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்), மகள் ஒய்எஸ் ஷர்மிளா இன்னொரு பக்கம் (காங்கிரஸ்) உள்ளதால் அவர்களின் தாயார் விஜயம்மா யாருக்கு ஆதரவளிப்பார் என்ற பெரிய கேள்வி எழுந்தது. இந்நிலையில் தான் விஜயம்மா தனது மகன் ஜெகன்மோகன் ரெட்டிக்கு பதில் மகள் ஒய்எஸ் ஷர்மிளாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக விஜயம்மா வெளியிட்டுள்ள வீடியோவில், ‛‛கடப்பா தொகுதியில் போட்டியிடும் எனது மகள் ஒய்எஸ் ஷர்மிளாவுக்கு ஓட்டளிக்க வேண்டும்'' என தெரிவித்துள்ளார்.
மகன் ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திர முதல்வராக உள்ள நிலையில் விஜயம்மா காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவராக லோக்சபா தேர்தலில் கடப்பா தொகுதியில் போட்டியிடும் மகள் ஒய்எஸ் ஷர்மிளாவுக்கு ஆதரவாக வீடியோ வெளியிட்டு இருப்பது தற்போது பேசும் பொருளாகி உள்ளது. இருப்பினும் கூட விஜயம்மாவுக்கு காங்கிரஸ் கட்சி ஒன்றும் புதிது இல்லை.
ஏனென்றால் விஜயம்மாவின் கணவரும், ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தின் முதல்வராக இருந்த ஒய்எஸ் ராஜசேகர ரெட்டி காங்கிரஸ் கட்சியில் தான் செயல்பட்டார். ஜெகன் மோகன் ரெட்டியும் அப்போது காங்கிரஸ் கட்சியில் தான் செயல்பட்டார். ஒய்எஸ் ராஜசேகர ரெட்டியின் மறைவுக்கு பிறகே ஜெகன்மோகன் ரெட்டி தனியே தனது தந்தையின் பெயரை சேர்த்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் என்ற கட்சியை தொடங்கி முதல்வரானார்.

அதன்பிறகு ஜெகன்மோகன் ரெட்டி தனது தாய் விஜயம்மாவுக்கு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் கவுரவ தலைவர் பதவியை வழங்கியிருந்தார். இந்த பதவியை கடந்த 2022ல் விஜயம்மா ராஜினாமா செய்தார். அப்போது அவர், என் மகன் ஜெகன் மோகன் ரெட்டி அரசியலில் வளர்ந்துவிட்டார். ஆனால் என் மகள் ஒய்எஸ் ஷர்மிளாவுக்கு எதுவும் செய்யவில்லையே என்ற குற்ற உணர்ச்சி இருக்கிறது. இதனால் இனி என் மகளுடன் தான் அரசியல் பயணம்'' என தெரிவித்து இருந்தார்.
விஜயம்மா ஜெகன் மோகன் ரெட்டியின் கட்சி பொறுப்பில் இருந்து விலகிய நிலையில் ஒய்எஸ் ஷர்மிளா புதிதாக ஒய்எஸ்ஆர் தெலுங்கானா என்ற கட்சியை தொடங்கி தெலுங்கானா அரசியலில் ஈடுபட தொடங்கினார். ஆனால் கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலின்போது ஒய்எஸ்ஆர் தெலுங்கானா என்ற கட்சியை அவர் காங்கிரசுடன் இணைத்தார். மேலும் அவர் ஆந்திரா அரசியலுக்கு திரும்பினார்.
இதையடுத்து தான் ஒய்எஸ் ஷர்மிளாவுக்கு ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவர் பதவி வழங்கப்பட்டது. தற்போது அவர் அண்ணன் ஜெகன்மோகன் ரெட்டிக்கு ஆதரவாக ஆந்திராவில் அரசியல் செய்வதோடு கடப்பா லோக்சபா தொகுதியில் போட்டியிட்டுள்ளார். இத்தகைய சூழலில் தான் தாய் விஜயம்மா தனது மகன் ஜெகன்மோகன் ரெட்டிக்கு பதில் காங்கிரஸ் தலைவராக உள்ள ஒய்எஸ் ஷர்மிளாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications