"நரேந்திர மோடிக்கு" வாக்களியுங்கள் என பிரசாரம் செய்த காங்கிரஸின் சித்தராமையா
நரேந்திர மோடிக்கு வாக்களியுங்கள் என்று வாய் தவறி காங்கிரஸ் கட்சியின் சித்தராமையா பிரசாரம் செய்தார்.
பெங்களூர்: காங்கிரஸ் வேட்பாளர் நரேந்திர சுவாமிக்கு வாக்களியுங்கள் என்று கூறுவதற்கு பதிலாக நரேந்திர மோடிக்கு வாக்களியுங்கள் என சித்தராமையா பிரசாரம் செய்தார்.
கர்நாடகத்தில் வரும் 12-ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்காக பிரசாரம் சூடுபிடித்து வருகிறது. இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் காரசாரமான விவாதங்களுடன் பிரசாரம் நடைபெற்று வருகிறது.
காங்கிரஸ் கட்சி சார்பில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, சித்தராமையா உள்ளிட்டோர் தேர்த்ல பிரசாரத்தில் பிஸியாக உள்ளனர். இந்நிலையில் இன்று மலாவல்லி தொகுதியில் சித்தராமையா தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார்.
குடிநீர் விநியோகம்
அப்போது அவர் அத்தொகுதி வேட்பாளர் நரேந்திர சுவாமி கடந்த 2008 மற்றும் 2013-ஆம் ஆண்டுகளில் எம்எல்ஏவாக இருந்த போது அவர் ஆற்றிய பணிகள் குறித்து பேசினார். அனைத்து கிராமங்களிலும் சாலை பணிகள், குடிநீர் விநியோகம், வீடுகள் கட்டுதல் உள்ளிட்ட பணிகள் அனைத்தையும் நரேந்திர மோடிதான் செய்தார் என்றார்.
மோடி கற்பனையானவர்
நரேந்திர சுவாமி என்பதற்கு பதில் நரேந்திர மோடி என கூறியதை கேட்டு அங்கிருந்த மக்கள் சிரித்து கொண்டிருந்தனர். அப்போது கட்சி நிர்வாகிகள் சித்தராமையாவிடம் சென்று கூறியதை அடுத்து நரேந்திர சுவாமியால் செய்யப்பட்ட பணிகள் என்று சரி செய்து கூறினார். இதில் முக்கியமான வார்த்தையே நரேந்திர ஆகும். சுவாமி இங்கிருக்கிறார். மோடியோ குஜராத்தில் இருக்கிறார். நரேந்திர மோடி கற்பனை, நரேந்திர சுவாமி உண்மையானவர் என்று கூறி சமாளித்தார்.
மீண்டும் மோடியின் பெயர்
இதன் பின்னர் மற்றொரு பெரிய தவறையும் சித்தராமையா வாய் தவறி சொல்லி செய்துவிட்டார். அதாவது நீங்கள் அளிக்கும் வாக்குகளை பரிசீலனை செய்து நரேந்திர மோடிக்கு எனக்கும் அளியுங்கள் என்று மீண்டும் மோடியின் பெயரை கூறிவிட்டார். இதுவும் கட்சி நிர்வாகிகளால் மீண்டும் சரி செய்யப்பட்டது.
எடியூரப்பாவை "பழித்த" அமித்ஷா
இதேபோல் கர்நாடகாவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, மிகவும் ஊழலுள்ள அரசுகளுக்கு இடையே போட்டி வைத்தால் எடியூரப்பாதான் முதலில் வருவார் என்று கூறிவிட்டார். அப்போது அமித்ஷாவுக்கு அருகிலேயே எடியூரப்பா அமர்ந்திருந்தார். இதையடுத்து கட்சி நிர்வாகிகள் அமித்ஷாவின் தவறை அவருக்கு உணர்த்தியது குறிப்பிடத்தக்கது.