தொடரும் வன்முறைகள்.. போலீஸ் குவிப்பு .. சித்தராமைய்யா வீடு மீது கல்வீச்சு !
மைசூரு: காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கர்நாடக மாநிலத்தில் வன்முறை சம்பவங்கள் தீவிரமாகி வரும் நிலையில் அம் மாநில முதல்வர் சித்தராமைய்யா வீட்டின் மீதும் போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரில் கன்னட அமைப்பினர் போராட்டத்தின் உச்சத்திற்கு சென்றுவிட்டன. நேற்று இரவு கேபிஎன் பஸ் டெப்பாவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 50க்கும் மேற்பட்ட பேருந்துகளுக்கு தீ வைத்து எரித்தன. மேலும் 27 லாரிகளுக்கும் தீவைக்கப்பட்டுள்ளன.
போராட்டம் காரணமாக பல இடங்களில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் இரு மாநிலங்களிலும் போக்குவரத்து தடைபட்டுள்ளது. பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் சேவை தடைபட்டுள்ளது. சில இடங்களில் போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியுள்ளனர். பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது.
எனினும் அங்கு நிலைமையை சமாளிக்க 15 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 200க்கும் மேற்பட்ட அதிரடிப்படையினர், 3000 ஹோம் கார்டுகளும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கர்நாடகாவில் அனைத்து இடங்களிலும் பதற்றமான சூழலே தற்போது வரைக்கும் நிலவி வருகிறது. போராட்டக்காரர்களை அடக்க போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் ஒருவர் பலியானார்.
இந்நிலையில் மைசூரில் உள்ள சித்தராமையா வீட்டின் மீது போராட்டக்காரர்கள் கல்லை எறிந்து தாக்குதலில் ஈடுபட்டனர். இதையடுத்து தகவல் அறிந்து வந்த போலீசார் விரைந்து வந்து வன்முறையில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தினர். இதனால் அந்த பகுதியில் போலீஸார் பெருமளவு குவிக்கப்பட்டுள்ளர்.