காவிரி கண்காணிப்புக் குழு நாளை கூடுகிறது.. தமிழகத்திற்கு சாதகமாக முடிவு வரும் என்று எதிர்பார்ப்பு
டெல்லி: காவிரி கண்காணிப்புக் குழுவின் கூட்டம் நாளை டெல்லியில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பையொட்டியே முடிவெடுக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே தமிழகத்திற்குச் சாதகமாக இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.
காவிரியில் தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்து விடக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்குப் போட்டது. இதை விசாரித்த உச்சநீதிமன்றம், பத்து நாட்களுக்கு தினசரி விநாடிக்கு 15,000 கன அடி நீரைத் திறந்து விடுமாறு கர்நாடகத்திற்கு உத்தரவிட்டது. மேலும் நீர் தேவைப்பட்டால், காவிரி கண்காணிப்புக் குழுவை தமிழகம் அணுகலாம் என்றும் உச்சநீதிமன்றம் அறிவித்தது.
இதையடுத்து கண்காணிப்புக் குழுக் கூட்டத்தைக் கூட்டுமாறு குழுவின் தலைவரும் மத்திய நீர் வள ஆதாரத் துறை செயலாளருமான சசி சேகருக்கு தமிழக அரசு இமெயில் அனுப்பியது. இதை ஏற்று நாளை கண்காணிப்புக் குழுக் கூட்டம் டெல்லியில் கூட்டப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய நான்கு மாநில உயர் அதிகாரிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.

கர்நாடக கோரிக்கை நிராகரிக்கப்படலாம்
இந்தக் கூட்டம் குறித்து மத்திய நீர்வளத்துறையின் முக்கிய அதிகாரி ஒருவர் கூறுகையில் கர்நாடக அணைகளின் நிலவரத்தை நேரில் வந்து பார்க்குமாறு கர்நாடக அரசு கோரியுள்ளது. ஆனால் அதற்கு வாய்ப்பில்லை. மேலும் குழு அனுப்பி பார்வையிட வேண்டும் என்று உச்சநீதிமன்றமும் கூறவில்லை. எனவே அதற்கான வாய்ப்பு இல்லை. கர்நாடக கோரிக்கை ஏற்கப்பட வாய்ப்பில்லை.

நடுவர் மன்றத் தீர்ப்புதான் முக்கியம்
நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பில் என்ன சொல்லப்பட்டுள்ளதோ அதை பின்பற்றுங்கள் என்றுதான் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. எனவே அதன்படியே நாங்கள் செயல்படுவோம். அதை ஒட்டியே குழுவின் முடிவு அமையும் என்று அவர் கூறினார். இதனால் கர்நாடக தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளது.

மோடியை வைத்து வித்தை காட்டப் பார்க்கும் கர்நாடகா
ஆனால் இப்படித்தான் முடிவு வரும் என்பது கர்நாடகத்திற்கும் தெரியும். எனவேதான் அது பிரதமர் மோடியை இதில் தலையிட வைத்து அதன் மூலம் கண்காணிப்புக் குழுவுக்கு நெருக்கடி கொடுத்து தனக்கு சாதகமான நிலையை ஏற்படுத்த முயற்சிக்கிறது.

மோடி தலையிட்டால் குட்டு கிடைக்கும்
ஆனால் உச்சநீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து வருவதாலும், நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி என்று உச்சநீதிமன்றமே தெளிவுபடுத்தியுள்ளதாலும் மோடி இதில் தலையிட்டால் அவருக்குத்தான் சிக்கல் வரும். இதனால்தான் அவர் தன்னைச் சந்தித்த தேவெ கெளடாவிடம் என்னால் இதில் தலையிட முடியாது என்று கூறி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

16ம் தேதி வழக்கு
நாளைய கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவு உச்சநீதிமன்றத்திற்குத் தெரிவிக்கப்படும். அதன் பின்னர் தமிழக அரசு தொடர்ந்துள்ள வழக்கின் விசாரணை செப்டம்பர் 16ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது. அப்போது உச்சநீதிமன்றம் புதிய உத்தரவைப் பிறப்பிக்கும்.

இனியும் தர முடியாது - பாட்டீல்
இதற்கிடையே, தமிழகத்திற்கு இனியும் தண்ணீர் தர முடியாது என்று கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் எம்.பி. பாட்டீல் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், உச்சநீதிமன்ற தீர்ப்பின் உத்தரவிற்கு கட்டுப்பட வேண்டும் என்ற கட்டாயத்தின் காரணமாகவே காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டது. தண்ணீர் பற்றாக்குறையால் கர்நாடகாவில் ஒரு போக சாகுபடி மட்டுமே நடைபெறும் நிலையில், மேலும் தண்ணீரை திறப்பது சாத்தியம் இல்லை. குடிநீர் தேவைக்கும் கர்நாடகாவில் பற்றாக்குறை நிலவுகிறது என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications