நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல்: மன்மோகன்சிங் வாக்குமூலத்துடன் சி.பி.ஐ. அறிக்கை தாக்கல்!
டெல்லி: நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் வழக்கில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் வாக்குமூலத்துடன் சி.பி.ஐ. விசாரணை நிலவர அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் தம் மீதான குற்றச்சாட்டை மன்மோகன்சிங் மறுத்துள்ளதாக கூறப்படுகிறது.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்காலத்தில் அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங், சில ஆண்டுகள் நிலக்கரி துறையையும் கூடுதலாக கவனித்து வந்தார். 2005-ம் ஆண்டு ஒடிஷா மாநிலத்தில் தாலபிரா-2 என்ற நிலக்கரி சுரங்கம், ஹிண்டால்கோ நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்டதில் முறைகேடுகள் நடந்ததாக கூறப்படுகிறது.

தொழில் அதிபர் குமார் மங்கலம் பிர்லா, அடுத்தடுத்து இரண்டு முறை பிரதமர் அலுவலகத்துக்கு கடிதம் எழுதிய பிறகு இந்த ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் எந்த குற்றச்செயலும் நடக்கவில்லை என்று சி.பி.ஐ. தாக்கல் செய்த அறிக்கையை சி.பி.ஐ. நீதிமன்றம் ஏற்கவில்லை.
மன்மோகன்சிங்கிடமும், அப்போதைய பிரதமர் அலுவலக அதிகாரிகளிடமும் விசாரணை நடத்துமாறு சி.பி.ஐ.க்கு கடந்த மாதம் 16-ந்தேதி நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதன்படி மன்மோகன்சிங்கிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது. குமார் மங்கலம் பிர்லா கடிதம் எழுதிய பிறகு பிரதமர் அலுவலகத்தில் நடந்த நிகழ்வுகள் குறித்து அவரிடம் கேட்கப்பட்டது.
அதற்கு மன்மோகன்சிங், ஹிண்டால்கோ நிறுவனத்துக்கு சாதகமாக செயல்படவில்லை என்றும், நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகளின்படியே ஒதுக்கீடு நடைபெற்றதாகவும் கூறியதாக தெரிகிறது.
இதுபோல் மன்மோகன்சிங்கிடம் முதன்மை செயலாளராக இருந்த டி.கே.ஏ.நாயர், தனிச்செயலாளராக இருந்த பி.வி.ஆர்.சுப்பிரமணியம் ஆகியோரிடமும் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது.
இந்நிலையில் சி.பி.ஐ. நீதிமன்றத்தில் நீதிபதி பாரத் பரஷார் முன்னிலையில் நேற்று இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது விசாரணை நிலவர அறிக்கையை சி.பி.ஐ. வழக்கறிஞர் மூடி ‘சீல்' வைத்த உறைக்குள் வைத்து தாக்கல் செய்தார். அதில், மன்மோகன்சிங், நாயர், சுப்பிரமணியம் ஆகியோர் அளித்த வாக்குமூலங்களும் இடம்பெற்று இருந்தன.
அவற்றை படித்து பார்த்த நீதிபதி, நீதிமன்றத்தின் ‘சீல்' வைத்து மூடி வைக்குமாறு உத்தரவிட்டார். பின்னர் பிப்ரவரி 19-ந்தேதிக்கு அடுத்தகட்ட விசாரணையை ஒத்திவைப்பதாக அறிவித்தார்.












Click it and Unblock the Notifications