வங்கிகளில் கடனுதவி பெற தாழ்வு மனப்பான்மை கூடாது: ப.சிதம்பரம் அறிவுரை
புதுக்கோட்டை: கிராம மக்கள் வங்கிகளில் கடனுதவி பெறுவதற்கு தாழ்வு மனப்பான்மையைத் தவிர்க்க வேண்டும் என மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் கூறியுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம் தாஞ்சூர் கிராமத்தில் நேற்று சிண்டிகேட் வங்கியின் புதிய கிளை மற்றும் ஏடிஎம் மைய திறப்பு விழா நடைபெற்றது. அந்த விழாவில் கலந்து கொண்ட மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், 24 பேருக்கு தொழில்கடனும், 8 பேருக்கு கல்விக்கடன், சுய உதவிக்குழுக்கடன் உள்பட பல்வேறு கடனுதவிகளை வழங்கினார்.
அத்தோடு, மக்களின் நலனில் அக்கறைக் கொண்டு, அதிக வங்கிகள் திறக்கப் பட்டு வருவதாகவும், அதனால் கிராம மக்கள் கடனுதவி பெற தாழ்வு மனப்பான்மையைத் தவிர்க்க வேண்டும் என அறிவுரைக் கூறினார். மேலும், விழாவில் அவர் பேசியதாவது...

வளர்ச்சியடைந்த வங்கி....
கடந்த 1925 -ல் தொடங்கப்பட்ட இவ்வங்கி நாட்டின் வளர்ச்சியடைந்த வங்கிகளில் முக்கியமானதாகத்திகழ்கிறது.
3044 கிளைகள்....
3044 கிளைகளுடன் செயல்படும் வங்கியின் வரவு செலவு 2 லட்சத்து 85 ஆயிரம் கோடியாகும். அடுத்த ஆண்டில் ரூ. 3 லட்சம் கோடியை எட்டிப்பிடிக்கும்.
சமூகப் பணியில் வங்கி....
இந்த வங்கியின் கிளை தொடங்குவதற்கு முன்னதாகவே இப்பகுதியில் குளங்களை தூர்வாரியது, கோயிலை சீரமைப்பு, சாலைப்பணிகள், அரிமளம் மருத்துவமனையில் நோயாளிகளின் உறவினர்கள் ஓய்வெடுக்கும் பகுதியை அமைத்தது போன்ற சமுதாயக்கடமையை ஆற்றியுள்ளது.
வியப்பு....மகிழ்ச்சி
இங்கு அமைக்கப்பட்டுள்ள சுய உதவிக் குழுக்களின் உற்பத்தி பொருள் கண்காட்சியை பார்த்த போது வியப்பளித்தது. திருப்பதி தேவஸ்தானத்துக்கு சுமார் 10 லட்சம் பேப்பர் தட்டுகள் தயாரிப்பதற்கான வாய்ப்பை பெற்றுள்ளதாக தகவல் தெரிவித்தனர். மகளிர் சுய உதவிக்குழுக்கள் வங்கிகளில் கடனுதவி பெற்று சொந்தமாக பொருளீட்டி வருவது மகிழ்ச்சியளிக்கிறது.
கடனுதவி....
எனினும், இந்த நிலை மேலும் அதிகரிக்க வேண்டும். அதற்கு கிராம மக்கள் வங்கிகளில் கடனுதவி பெற தாழ்வு மனப்பான்மையைத் தவிர்க்க வேண்டும்.
வங்கிகளில் ஆலோசனைகள்....
குறிப்பாக படித்த இளைஞர்கள் தொழில் தொடங்க முன்வர வேண்டும். பெரிய அளவில் தொழில் தொடங்க முன்வருவோருக்கு கடனுதவி அளிப்பது குறித்து உரிய ஆலோசனைகளையும், வழிகாட்டுதல், ஆலோசனைகளைத் தருவதற்கு வங்கிகள் தயாராக இருக்கின்றன.
மேலும், 10000 வங்கிகள்....
வங்கிக்கிளைகளை அதிகமாகத் திறக்க வேண்டும் என்ற கொள்கை முடிவின்படி கடந்த 2011 -ல் நாடு முழுதும் 7 ஆயிரம் வங்கிக்கிளைகளும், 2012 -ல் 7500 வங்கிக்கிளைகளும், நிகழ் ஆண்டில் 10 ஆயிரம் வங்கிக்கிளைகளும் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.
திருமலையில் மட்டும்....
அதில் திருமயம் தொகுதியைப் பொறுத்தவரை ஏற்கனவே 9 வங்கிகள் மட்டுமே இயங்கி வந்தன. ஐக்கிய முற்போக்குக்கூட்டணி ஆட்சிக்கு வந்தபின் 26 வங்கிகளாக அதிகரித்துள்ளது' எனத் தெரிவித்தார்.
மற்றும் பலர்....
இதில்,பொது மேலாளர் பிரீத்தம்லால், கிளை மேலாளர் ஜோதிமணவாளன், முன்னாள் எம்எல்ஏ-க்கள் ராம. சுப்புராம், தி. புஷ்பராஜ், ஊராட்சித்தலைவர் எம். சரவணன், துணைத்தலைவர் கே. புவனேஸ்வரி, முன்னாள் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் மணிமேகலை ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications