மத மோதல் தடுப்பு மசோதாவில் சில பகுதிகள் நீக்கம்- இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல்!
டெல்லி: மத மோதல் தடுப்பு மசோதாவில் சர்ச்சை பகுதிகள் நீக்கப்பட்ட நிலையில் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது.
மத மோதல்களைத் தடுக்கும் நோக்கத்துக்காக மத்திய அரசு மத மோதல் தடுப்பு மசோதாவை தயாரித்தது. முதலில் தயாரிக்கப்பட்ட இந்த மசோதாவில் கலவரத்துக்கு பொறுப்பு பெரும்பான்மை சமுதாயத்தையே சாரும் என்று இருந்தது. இதற்கு பாரதிய ஜனதா உள்பட சில கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.இதனைத் தொடர்ந்து இதில் திருத்தம் செய்து இப்போது, அனைத்து சமுதாயங்களுக்கும் சமமான நிலை உருவாக்கப்பட்டுள்ளது.
அதேபோல முதலில், கலவர சமயங்களில் மத்திய அரசு துணை ராணுவப்படையை எந்த ஒரு மாநிலத்துக்கும் அந்த மாநில அரசின் ஆலோசனையை பெறாமலேயே அனுப்ப அதிகாரம் வழங்குவதாக இருந்தது. இதற்கு பாரதிய ஜனதா, தமிழக முதல்வர் ஜெயலலிதா, மேற்குவங்காள முதல்வர் மம்தா பானர்ஜி உள்பட பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பலத்த எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து இப்போது அதுவும் திருத்தப்பட்டுள்ளது. மத்திய அரசின் உதவி தேவைப்படுவதாக கருதி மாநில அரசு கருத்து தெரிவித்தால் மட்டுமே அந்த மாநிலத்துக்கு துணை ராணுவப்படையை மத்திய அரசு அனுப்பும் என்று மாற்றப்பட்டுள்ளது.
நேற்று நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் திருத்தப்பட்ட மத மோதல் தடுப்பு மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இதனால் இன்று நாடாளுமன்றத்தில் இம் மசோதா தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications