வலியப் போய் வழக்கில் சிக்கி சிறை தண்டனை அனுபவிக்கும் ரஜத் குப்தாவும் ஆருஷி பெற்றோரும்!
டெல்லி: நீதிமன்றங்கள் சில விசித்திர வழக்குகளை சந்திப்பது போல சில வழக்குகளுக்கும் விசித்திர ஒற்றுமைகள் இருப்பது ஆச்சரியப்பட வைக்கிறது. ஆம் சிறுமி ஆருஷி கொலை வழக்கும் இன்சைட் டிரேடிங் புகாரில் தொடர்பான அமெரிக்கா வாழ் இந்தியரான ரஜத் குப்தா மீதான வழக்கும் ஒற்றுமைகளைக் கொண்டிருக்கின்றன என்பது ஆச்சரியமளிக்கக் கூடிய ஒன்றுதான்.
ரஜத் குப்தா யார்? என்ன வழக்கு?.
அமெரிக்காவில் மெக்கின்சி அண்ட் கோ எனும் ஆலோசனை நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருந்தவர் ரஜ்த் குப்தா. இந்தியரான இவரது நெருங்கிய நண்பர்தான் இலங்கைத் தமிழரான ராஜரத்தின பிள்ளை.
ராஜரத்தினம் பிள்ளை, பங்குச் சந்தையில் இன்சைடர் டிரேடிங் என்ற முறையில் நிறுவனங்களின் முக்கிய நிர்வாகிகளை கையில் போட்டுக் கொண்டு அவற்றின் பங்குகளை முன் கூட்டியே தெரிந்து பல்லாயிரம் கோடி லாபம் பார்த்தவர் என்பது குற்றச்சாட்டு. இதில் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
அமெரிக்க புலனாய்வுத் துறைக்கு சந்தேகம்...
இந்த வழக்கில் ரஜத் குப்தா மீது அமெரிக்க புலனாய்வுத் துறைக்கு சந்தேகம் இருந்தது. அதனால் அவரை கண்டித்து அவருக்கு அபராதம் விதிக்க முடிவு செய்திருந்தது. ஆனால் விதி யாரைவிட்டது..
ரஜத் குப்தாவோ தான் யார் தெரியுமில்ல என்ற ரேஞ்சுக்கு கொந்தளிக்க ஆரம்பித்தார்... தனக்கு அவமானமாகிவிட்டது..கெட்ட பெயராகிவிட்டது என்றெல்லாம் உதார் விட்டுக் கொண்டிருந்தார்.. மேலும் உங்க மேலே மானநஷ்ட வழக்கு போடுவேன் என்று மிரட்டினார்.
அமைதியாக போயிருந்தால் சிக்கலே இல்லை..
இதையடுத்து அமெரிக்க புலனாய்வுத் துறை ராஜரத்தினம் பிள்ளைக்கும் ரஜத் குப்தாவுக்குமான நெருக்கமான தொடர்பை ஆவணங்களாக்கி நீதிமன்றத்தில் தாக்கல் செய்துவிட்டது.
ரஜத் குப்தா, அபராதம் கட்டிவிட்டு அமைதியாக போயிருந்தால் சிக்கலே இல்லை.. தேவையில்லாமல் உதார் விடப் போய் இப்போது 11 ஆண்டுகாலம் சிறைத் தண்டனையை அனுபவித்து வருகிறார். (மேலும் விவரங்களுக்கு இந்த புத்தகம் உதவும்)
இதே நிலைமைதான் ஆருஷி -ஹேம்ராஜ் கொலை வழக்கிலும் நடந்துள்ளது.
ஆருஷி கொலை வழக்கு என்ன?
2008ம் ஆண்டு மே 15ம் தேதியன்று டெல்லியை அடுத்த நொய்டாவில் மருத்துவர்களான ராஜேஸ்-நுபுர் தல்வார் தம்பதியினர் ஒரே மகளான ஆருஷியும் அவர்களது வீட்டு வேலைக்காரன் ஹேம்ராஜும் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். இந்த வழக்கில் எந்த ஒரு துப்பும் கிடைக்கவில்லை. சம்பவ இடத்தில் துளி தடயமும் இல்லை.. சிபிஐயும் மிகவும் போராடிப் பார்த்தது. வேறுவழியின்று போதுமான ஆதாரம் இல்லாததால் வழக்கை கைவிடப் போவதாக சிபிஐ நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது.
மறு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்...
சிபிஐ இப்படி மனு தாக்கல் செய்த போது கொந்தளித்துப் போய்விட்டார் ஆருஷியின் தந்தை ராஜேஸ் தல்வார். அப்போது நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த மனுவில் ஆருஷியின் துரதிர்ஷ்டம் பிடித்த தந்தை நான். எனது மகள் 2008ம் ஆண்டு 15ம் தேதி நள்ளிரவில் கொலை செய்யப்பட்டாள். இது மிகப் பெரிய கொடுமை, குற்றச் செயல். ஆனால் இந்த வழக்கை துப்பு துலக்காமல், குற்றம் இழைத்தவர்களைக் கண்டுபிடிக்க முயலாமல் வழக்கை மூடப் பார்க்கிறது சிபிஐ. இதை அனுமதிக்கக் கூடாது. மறு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று உணர்ச்சிவயப்பட்டு கூறியிருந்தார்.
ராஜேஸ் தல்வாரே வலிய வந்து...
ஆருஷி- ஹேம்ராஜ் கொலை வழக்கில் அதாவது முன்பு சொன்னதைப் போல ராஜரத்தினம் வழக்கில் ரஜத் குப்தா மீது சந்தேகம் இருந்ததைப் போலவே ராஜேஸ்- நுபுர் தல்வார் மீது சந்தேகம் இருந்த போதும் ஆதாரமில்லாமல் தவித்தது சிபிஐ. ஆனால் ராஜேஸ் தல்வாரே வலிய வந்து விசாரிக்க வேண்டும் என்று கோரினார்.
சிபிஐயும் மீண்டும் துருவி துருவி விசாரணை நடத்த மருத்துவ தம்பதியினராகிய ராஜேஸ்- நுபுர் தல்வாரே ஆருஷி- ஹேம்ராஜ் கொலையாளிகள் என்பதை நிரூபித்து ஆயுள் தண்டனையும் வாங்கிக் கொடுத்துவிட்டது.
இப்படியும் சில விசித்திர வழக்குகள்!!