ஒரே நேரத்தில் நாடாளுமன்ற, மாநில சட்டசபைத் தேர்தலை நடத்தத் தயார்... நஜீம் ஜைதி அறிவிப்பு
டெல்லி: அமைத்து கட்சிகளும் சம்மதம் தெரிவித்தால் நாடாளுமன்ற மற்றும் மாநில சட்டசபைத் தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்தத் தயாராக இருப்பதாக தலைமைத் தேர்தல் கமிஷனர் நஜீம் ஜைதி தெரிவித்துள்ளார். அதே சமயம் ஓட்டுப்போடுவதை கட்டாயமாக்குவது நம் நாட்டில் சாத்தியமில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
27 நாடுகளைச் சேர்ந்த தேர்தல் அதிகாரிகள் கலந்துகொண்ட, சர்வதேச வாக்காளர் விழிப்புணர்வு குறித்த 3 நாள் கருத்தரங்கு டெல்லியில் நேற்று தொடங்கியது. இதில் அவரவர் நாடுகளில் பின்பற்றப்படும் தேர்தல் நடைமுறைகள் தொடர்பான அனுபவங்களை தேர்தல் அதிகாரிகள் பகிர்ந்துகொள்கின்றனர்.

இந்த கருத்தரங்கை தலைமை தேர்தல் கமிஷனர் நஜீம் ஜைதி தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் மத்தியில் அவர் பேசினார்.
அப்போது நாடாளுமன்றம் மற்றும் மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்த பரிந்துரை செய்து கடந்த மார்ச் மாதம் பிரதமர் மோடி எழுதிய கடிதம் குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு நஜீம் ஜைதி, "அனைத்து அரசியல் கட்சிகளும் ஒரு மனதுடன் இதுபோல் ஒரே நேரத்தில் நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டசபைகளுக்கு தேர்தலை நடத்துவதற்கு ஒப்புக்கொண்டால் அதற்கு நாங்கள் தயாராகவே இருக்கிறோம்.
அதே நேரம் மத்திய அரசும் தேர்தலை நடத்துவதற்கு தேவையான நிதி ஆதாரம் உள்ளிட்ட அனைத்து வித உதவிகள் மற்றும் கூடுதல் பாதுகாப்பு படைகளை ஒதுக்கித்தரவேண்டும்.
ஏனென்றால் இந்த தேர்தல்களுக்காக அதிக அளவில் மின்னணு வாக்குபதிவு எந்திரங்கள் பயன்படுத்த வேண்டியது இருக்கும். அவற்றை வாங்குவதற்கு அதிக நிதியும் (ரூ.9 ஆயிரம் கோடி) தேவைப்படும். இதற்கு சம்மதம் தெரிவித்தால் ஒரே நேரத்தில் நாடாளுமன்ற, மாநில சட்டசபைகளுக்கு தேர்தலை நடத்துவதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை" என்றார்.
அதனடித் தொடர்ந்து அடுத்த ஆண்டு 5 மாநிலங்களுக்கு நடைபெற உள்ள சட்டசபை தேர்தல்கள் ஒரே நேரத்தில் நடத்தப்படுமா? அல்லது தனித்தனி தேதிகளில் இருக்குமா? என்ற கேள்விக்கு,'அது மாணவர்களின் பொதுத்தேர்வு மற்றும் பண்டிகைகள் ஆகியவற்றின் அடிப்படையில் இதுபற்றி முடிவு செய்யப்படும்' என நஜீம் ஜைதி பதிலளித்தார்.
இதற்கிடையே வாக்காளர் விழிப்புணர்வு கருத்தரங்கைத் தொடங்கி வைத்துப் பேசிய நஜீம் ஜைதி, "சில நாடுகளில் கட்டாயமாக வாக்களிப்பது நடைமுறையில் உள்ளது பற்றி முன்பு விவாதித்தோம். ஆனால் இந்த சிந்தனை நடைமுறையில் சாத்தியமில்லை'' என்றார்.












Click it and Unblock the Notifications