5 ரூபாய் லஞ்சம் வாங்கி சிக்கிய ஊழியர்.. பொறி வைத்து பிடித்த அதிகாரிகள்!
அகமதாபாத்: 5 ரூபாய் லஞ்சம் பெற்றவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் குஜராத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 5 ரூபாய்க்கு இன்றைக்கு ஒரு டீ கூட வாங்க முடியாத நிலையில், கிராம மக்களிடம் 5 ரூபாய் லஞ்சம் வாங்கிய அரசு ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குஜராத் மாநிலத்தின் ஜாம்நகர் மாவட்டத்தில் மோர்கண்டா கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் விவசாயிகளுக்கு அரசு ஆவணங்களை வழங்குவதற்கு ரூ.5 வாங்கிய மோர்கண்டா கிராமத்தைச் சேர்ந்த கணினி ஆபரேட்டர் நவீன்சந்திர நகும் என்பவரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்துள்ளனர்.

மோர்கண்டா கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில், வருவாய்த்துறையால் வழங்கப்படும் நில ஆவணங்கள் கேட்டு வருவோரிடம், கம்ப்யூட்டர் ஆபரேட்டர் மோர்கண்டா, ஒவ்வொரு ஆவணத்திற்கும் 5 ரூபாய் வாங்குவதை வழக்கமாக வைத்திருந்துள்ளார். அரசால் வழங்கப்படும் ஃபார்ம்களுக்கு 5 ரூபாய் வசூலித்து வந்துள்ளார் அவர்.
எந்த ஆவணம் கேட்டாலும், ரூ.5 லஞ்சம் வாங்குவதாக, கம்ப்யூட்டர் ஆபரேட்டர் மீது அந்த கிராமத்தைச் சேர்ந்த சிலர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, மோர்கண்டா இன்ஸ்பெக்டர் எம்.டி.படேல் தலைமையிலான குழுவினர், ரசாயனம் தடவிய ரூபாயை கொடுத்து அனுப்பியுள்ளனர்.
அதன்படி, அவர்கள் சென்று கணினி ஆபரேட்டரிடம் ஆவணம் கேட்டு பணம் கொடுத்துள்ளனர். அதனை வாங்கி நவீன் பாக்கெட்டில் போட்டதும் அதிகாரிகள் உள்ளே நுழைந்தனர். நவீன்சந்திர நகும் லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக கைது செய்தனர்.
லஞ்சம் வாங்கியபோது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட கிராம பஞ்சாயத்து போர்டு கம்ப்யூட்டர் ஆபரேட்டர் நவீன்சந்திர நகுமிடம் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த சம்பவம் குறித்து பேசியுள்ள இன்ஸ்பெக்டர் எம்.டி.படேல் "கடந்த 2013ஆம் ஆண்டில் இருந்து நவீன்சந்திர நகும் இங்கு பணியாற்றி வருகிறார். விவசாயிகளுக்கு நில வருவாய் ஆவணங்கள் மற்றும் உரிமைக் கடிதங்களை வழங்குவது தான் அவருடைய வேலை. தினமும் இரண்டு மணி நேரமே வேலை செய்கிறார்.
விவசாயிகளுக்கு அரசு நில ஆவணங்களை வழங்க ஒரு விண்ணப்பத்திற்கு ரூ.5 வாங்கி வந்துள்ளார். புகாரின் அடிப்படையில் அவருக்கு பொறி வைத்து பிடித்தோம். மிகக்குறைவான தொகை என்றபோதிலும், இந்த லஞ்சம் ஊழல், நிர்வாகத்தின் அடிமட்டம் வரையிலும் பரவி இருக்கும் தன்மையை எடுத்துக் காட்டுகிறது" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications