உம்மன்சாண்டியை புறக்கணிப்பதா? கேரளாவில் மோடிக்கு எதிராக காங். கருப்புக் கொடி போராட்டம்!
கொல்லம்: கேரளாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற நிகழ்வில் மாநில முதல்வர் உம்மன்சாண்டியை பங்கேற்கவிடாமல் செய்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து கருப்புக் கொடி போராட்டம் நடத்திய காங்கிரஸ் தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர். இதேபோல் புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியினரும் பிரதமர் மோடி வருகைக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.
கேரளா முன்னாள் முதல்வர் ஆர். சங்கரின் சிலை திறப்பு விழா நேற்று கொல்லத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் உம்மன்சாண்டி பங்கேற்பதாக அழைப்பிதழில் போடப்பட்டிருந்தது.

ஆனால் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ஸ்ரீநாராயணகுரு பீடத்தின் தலைவரும் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்தவருமான வெள்ளாபள்ளி நடேசன், உம்மன்சாண்டியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நீங்கள் நிகழ்ச்சிக்கு வர வேண்டாம் என கூறியிருக்கிறார். இதனால் உம்மன்சாண்டியும் தாம் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என அறிவித்தார்.
இது நாடு தழுவிய அளவில் பெரும் சர்ச்சையாக வெடித்தது. ஒட்டுமொத்த கேரளா மக்களையே பிரதமர் மோடி அவமதித்துவிட்டதாக காங். துணைத் தலைவர் ராகுல் காந்தி சாடியிருந்தார்.
இந்நிலையில் திட்டமிட்டபடி கொல்லத்தில் முன்னாள் முதல்வர் ஆர். சங்கர் சிலை திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழா அரங்கத்துக்கு பிரதமர் மோடியின் கார் வந்த போது உம்மன்சாண்டியை புறக்கணித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர் காங்கிரசார் கருப்புக் கொடி காட்டினர். அத்துடன் கருப்பு கொடியுடன் கூடிய பலூன்களையும் பறக்கவிட்டனர்.
இதனைத் தொடர்ந்து கருப்புக் கொடி காட்டிய காங்கிரஸ் தொண்டர்களை போலீசார் கைது செய்தனர். இதேபோல் கொல்லம் நகரில் சங்கர் சிலை முன்பாக உண்ணாவிரதம் இருந்தவர்களையும் போலீசார் கைது செய்தனர்.
கையில் கருப்பு பேண்டுகளை அணிந்தபடி சங்கர் சிலை திறப்பு விழா அரங்கத்துக்கு செல்ல முயன்ற மகிளா காங்கிரஸ் தொண்டர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். இடதுசாரியான புரட்சிகர சோசலிஸ் கட்சியினரும் பிரதமர் மோடிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.












Click it and Unblock the Notifications