பிரியங்கா பொறுப்பேற்க வேண்டும்.. மாஜி காங். அமைச்சர் கோரிக்கை
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பை பிரியங்கா காந்தி ஏற்க வேண்டும் என்பதே காங்கிரஸாரின் விருப்பம். அதை நிறைவேற்ற பிரியங்கா முன்வர வேண்டும் என்று ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் உணவுத்துறை அமைச்சராக இருந்த கே.வி.தாமஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், தொண்டர்களுடன் விசேஷமான தொடர்பை வைத்திருப்பவர் பிரியங்கா காந்தி. அவர் காங்கிரஸ் கட்சியின் பொறுப்புக்கு வந்தால் காங்கிரஸ் புத்துணர்ச்சி அடையும். காங்கிரஸ் தொண்டர்களும் அதைத்தான் விரும்புகிறார்கள்.
காங்கிரஸ் பொறுப்பை ஏற்க பிரியங்கா முன்வர வேண்டும். பார்ப்பதற்கு தனது பாட்டி இந்திரா காந்தி போல இருக்கிறார் என்பது மட்டுமல்ல, இந்திராவைப் போல திறமையான நிர்வாகியும் கூட பிரியங்கா. அனைவராலும் மதிக்கப்படக் கூடிய தலைவராக, இந்திராவைப் போல திகழும் வாய்ப்புகள் பிரியங்காவுக்கு பிரகாசமாக உள்ளன.
சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகிய மூன்று பேரும் இணைந்து காங்கிரஸை வழி நடத்தினால் அது கட்சிக்கு மட்டுமல்ல நாட்டுக்கும் கூட பெரும் லாபமாக அமையும் என்றார் தாமஸ்.












Click it and Unblock the Notifications