கூட்டணி அரசை நடத்துவதில் காங்கிரஸ் பரிதாபமாக தோற்றுவிட்டது: வெங்கையா நாயுடு
ஜாம்ஷெட்பூர்: கூட்டணி அரசை நடத்துவதில் காங்கிரஸ் பரிதாபமாக தோற்றுவி்ட்டது, அதனால் தான் காங்கிரஸ் ஆதரவு கட்சிகள் ஒன்றன் பின் ஒன்றாக கூட்டணியிலிருந்து விலகி வருகின்றன' எனத் தெரிவித்துள்ளார் பா.ஜ.க. மூத்த தலைவர் வெங்கையா நாயுடு.
ஜாம்ஷெட்பூர் தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் பித்யத் பாரன் மகதோவை ஆதரித்து வெங்கையா நாயுடு தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் காங்கிரஸ் கட்சிக்கு தனது கூட்டணிக் கட்சிகளை ஒருங்கிணைத்து அரசை நடத்த தவறி விட்டது எனக் குற்றம் சாட்டினார்.
மேலும், இது தொடர்பாக அவர் கூறியதாவது :-
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் 14 முதல் 15 கட்சிகள் இருந்தன. ஆனால் சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, இடதுசாரிகள் உட்பட அனைத்து கட்சிகளும் ஒன்றன் பின் மற்றொன்றாக காங்கிரஸ் கூட்டணியிலிருந்து விலகி வருகின்றன.
முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் 26 கட்சிகளின் ஆதரவுடன் வெற்றிகரமாக தேசிய ஜனநாயக கூட்டணியை நடத்தினார். ஆனால் தற்போது காங்கிரஸ் கட்சிக்கு பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்படுவதற்கு கூட ஒரு தலைவர் கிடையாது. ஜே.எம்.எம் மற்றும் தேசிய மாநாடு போன்ற சிறிய கட்சிகளே காங்கிரசுக்கு ஆதரவாக உள்ளன.
தெலுங்கு தேச கட்சி உட்பட தென்னிந்தியாவில் பல கட்சிகள் பா.ஜ.கவுடன் கைகோர்த்துள்ளன. இன்னும் பல கட்சிகள் பா.ஜ.க.வுடன் சேர உள்ளன. காங்கிரஸ் தற்போது ஒரு படி முன்வைத்தால் மூன்று படி பின்னோக்கி செல்கிறது. வரும் மக்களவை தேர்தலில் பா.ஜ.க. தனது கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் 250 முதல் 300 இடங்களில் வெற்றி பெறும்' என இவ்வாறு அவர் பேசினார்.