சித்தராமையா விலக வேண்டும்.. குழம்பிய நீரில் மீன் பிடிக்கும் காங். மூத்த தலைவர்கள்! #cauvery
பெங்களூரு: காவிரி பிரச்சனையில் கர்நாடகா முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்ய காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கடும் நெருக்கடி கொடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி செப்டம்பர் 20-ந் தேதி வரை காவிரியில் தமிழகத்துக்கு 12,000 கன அடி நீர் திறந்துவிடப்பட வேண்டும். ஆனால் இந்த உத்தரவை அமல்படுத்த எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் உச்சகட்ட வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளன.
இதனால் உச்சநீதிமன்ற உத்தரவை கர்நாடகா அரசு அமல்படுத்துவதில் கர்நாடகா அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிட்டதால் கன்னடர்களின் கோபத்துக்கு ஆளாக நேரிடும் என்பது காங்கிரஸ் மூத்த தலைவர்களின் கருத்து.
இதனால் சித்தராமையா முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும் என்று அவருக்கு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் எஸ்.எம். கிருஷ்ணா, வீரப்பமொய்லி உள்ளிட்டோர் நெருக்கடி கொடுத்து வருகின்றனர். இது தொடர்பாக சித்தராமையா இல்லத்தில் தீவிர ஆலோசனை நடைபெற்று வருகிறது.