வாரணாசியை கலக்கிய பிரியங்கா... சி.ஏ.ஏ.வுக்கு எதிராக சிறை சென்ற ஏக்தா சேகர் உள்ளிட்டோருடன் சந்திப்பு
வாரணாசி: உத்தரப்பிரதேசத்தின் வாரணாசியில் மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக போராடியவர்களை காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இன்று சந்தித்து உரையாடினார்.
கோவில் நகரமான வாரணாசியில் ரவிதாஸ் கோவிலுக்கு முதலில் சென்று வழிபாடு நடத்தினார் பிரியங்கா காந்தி. அங்கு கோவில் அறங்காவலர்களையும் சந்தித்து பேசினார் பிரியங்கா.

பின்னர் பஞ்சகங்கா காட் பகுதிக்கு சென்றார். அங்கும் ஶ்ரீமடம் மடாதிபதியை சந்தித்து வழிபாடுகளை நடத்தினார். பின்னர் சி.ஏ.ஏ.வுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட சிறை சென்றோர் உட்பட 59 பேரை நேரில் சந்தித்தார் பிரியங்கா.
அப்போது பிரியங்கா காந்தி பேசியதாவது: வாரணாசியில் டிசம்பர் 19-ல் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக போராடியவர்கள் மீது அரசு அடக்குமுறையை ஏவி இருக்கிறது. சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் உத்தரப்பிரதேச அரசால் அச்சுறுத்தப்பட்டுள்ளனர்.
தாங்கள் குறிவைத்து ஒடுக்கப்படுவதாக அவர்கள் குமுறியுள்ளனர். நாங்கள் அவர்களுடன் இணைந்து ஆதரவாக நிற்பதற்காக பெருமைப்படுகிறோம். தங்களது உரிமைக் குரலை அமைதியான முறையில் வெளிப்படுத்தியவர்கள் அவர்கள்..
பாதிக்கப்பட்டவர்கள் பல்கலைக் கழக மாணவர்கள். அவர்கள் ஒன்றும் வன்முறையாளர்கள் அல்ல. இந்த தேசத்தை துண்டாடும் வகையில் அரசியல் சாசனத்துக்கு எதிராக பாஜக அரசு செயல்படுகிறது. இவ்வாறு பிரியங்கா காந்தி கூறினார்.
இச்சந்திப்பின் போது சமூக ஆர்வலர்களான ரவி- ஏக்தா சேகர் தம்பதியினரையும் பிரியங்கா காந்தி சந்தித்தார். சி.ஏ.ஏ.வுக்கு எதிரான போராட்டத்தில் இருவரும் கைது செய்யப்பட்டனர். அப்போது இவர்களது 18 மாத குழந்தை உறவினர்கள் வீட்டில் தனித்துவிடப்பட்ட செய்தி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications