வீதியில் பேசுவதற்கும், லோக்சபாவில் பேசுவதற்கும் வித்தியாசம் தெரியாதவர் சு. சுவாமி: காங்கிரஸ் சாடல்
டெல்லி: பாரதிய ஜனதா மாநிலங்களவை உறுப்பினர் சுப்ரமணியன் சுவாமி வீதியில் பேசுவதற்கும், மாநிலங்களவையில் பேசுவதற்கும் வித்தியாசம் தெரியாதவராய் இருப்பதாக மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கூறியுள்ளார்.
மாநிலங்களவை நியமன எம்.பி.யாக சமீபத்தில் பதவியேற்றுக் கொண்ட பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி, தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களை தெரிவித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நேற்று மாநிலங்களவையில் பேசிய சுப்ரமணியன் சுவாமி, அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஊழல் விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு தொடர்பு உள்ளதாக சில சர்ச்சைக்குரிய கருத்துகளை மீண்டும் தெரிவித்தார்.
இதற்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். அப்போது பேசிய அக்கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், வீதியில் பேசுவதற்கும், மாநிலங்களவையில் பேசுவதற்கும் வேறுபாடு தெரியாமல் எதிர்க்கட்சிகள் மீது குற்றச்சாட்டுகளை சுப்ரமணியன் சுவாமி சுமத்துவதாக கண்டனம் தெரிவித்தார். மாநிலங்களவையின் அலுவல்களை சீர்குலைக்கவே பாரதிய ஜனதா அவரை எம்.பி.யாக்கி இருப்பதாகவும் ஆசாத் குற்றம்சாட்டினார்.
இந்த விவாகரம் குறித்து மாநிலங்களவை தலைவர் பி.ஜே. குரியன் பேசுகையில் " நீங்கள் தேவையில்லாமல் ஆத்திரமூட்டும் விதமாக, பேசுகிறீர்கள். நான் உங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும்" என்று கண்டித்தார். அவை விதிமுறைகளை புரிந்துகொண்டு, அவர் செயல்பட வேண்டும் என்றும் பிஜே குரியன் தெரிவித்தார்.
முன்னதாக, மாநிலங்களவை தொடங்கியதும், முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து, நியமன எம்.பி.யாக பதவியேற்று கொண்டார்.