முக்கிய தலைகளுக்கு கல்தா கொடுத்த பாஜக! வாரி அணைத்து கொண்ட காங்கிரஸ்! சூடுபிடிக்கும் குஜராத் தேர்தல்!
காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் வரும் 1ம் தேதி சட்டப் பேரவை தேர்தல் தொடங்க உள்ள நிலையில், ஆளும் பாஜகவுக்கும் காங்கிரசுக்கும் கடும் போட்டி நிலவி வருகிறது.
இந்நிலையில், காங்கிரஸ் 46 பேர் கொண்ட தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெற உள்ள நிலையில், அடுத்தடுத்த வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பட்டியலில் தற்போது பல 'சிட்டிங்' எம்எல்ஏக்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தற்போது வரை கட்சி 89 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்திருக்கிறது.

வேட்பாளர்கள் அறிவிப்பு
குஜராத் மாநிலத்தில் வரும் டிசம்பர் மாதம் 1ம் தேதி மற்றும் 5ம் தேதி என இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் 8ம் தேதி அறிவிக்கப்படுகின்றன. இந்நிலையில், தேர்தல் பரப்புரை சூடுபிடிக்க தொடங்கியுள்ளன. கடந்த 27 வருடங்களாக ஆட்சியில் இருந்து வரும் பாஜகவை அகற்ற காங்கிரஸ் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது 46 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை கட்சி அறிவித்துள்ளது. இந்த லிஸ்ட்டில் தற்போதைய எம்எல்ஏக்கள் பலரின் பெயர் இடம்பெற்றிருக்கிறது. இந்நிலையில் காங்கிரஸ் வெற்றியை நோக்கி சென்றுகொண்டிருப்பதாக அக்கட்சித் தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

மூத்த தலைவர்கள்
மாநிலத்தின் கட்சியின் செயல் தலைவராக உள்ள 'லலித் ககதாரா' மீண்டும் தங்கரா தொகுதியிலும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் பரேஷ் தனானிக்கு அம்ரேலி தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளன. அதேபோல மூத்த எம்எல்ஏக்களான முகமது ஜாவேத் ரிர்சாடா, லலித் வசோயா, விக்ரம் மேடம், புஞ்சா வன்ஷ், விர்ஜி தும்மர், பிரதாப் துதாத், அம்ப்ரிஷ் டெர், நௌஷாத் சோலங்கி, பிரவின் முச்சாடியா, பாபு வாஜா என தற்போது எம்எல்ஏவாக உள்ளவர்களுக்கு அதே தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த 2017 தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்றவர்களுக்கும் மற்றொரு வாய்ப்பை கட்சி வழங்கியுள்ளது.

பாஜக
ஆனால், மறுபுறம் கட்சியிலிருந்து கடந்த 2 நாட்களில் மூன்று எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்துள்ளனர். இதில் ஒருவர் கடந்த 10 ஆண்டுகளாக எம்எல்ஏவாக இருந்து வருகிறார். அவர் தனது மகனுக்கு வாய்ப்பு கேட்டதாகவும், ஆனால் கட்சி அதற்கு அனுமதிக்காததால் அவர் பாஜகவுக்கு சென்றதாகவும் சொல்லப்படுகிறது. இது காங்கிரசுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. காங்கிரஸ்-பாஜக மோதல் ஒருபுறம் இருந்தாலும், மறுபுறம் ஆம் ஆத்மி தொடர்ந்து மாநிலம் முழுவதும் தீவிரமாக பரப்புரையை மேற்கொண்டு வருகிறது. காங்கிரசுக்கு குஜராத் மாநிலத்திற்கென வலுவான தலைமை இல்லாததால் கட்சியின் வாக்குகளை ஆம் ஆத்மி பிரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

வாய்ப்பு மறுப்பு
மோர்பி பாலம் விபத்து, குஜராத் மாநில அரசு பள்ளிகளின் நிலைமை ஆகியவை தேர்தல் பரப்புரையில் பேசுபொருளாக மாறியுள்ளன. பாஜகவை பொறுத்த அளவில், மோர்பி பாலம் விபத்தில் மக்களை காப்பாற்றியவருக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது. அதே போல பல மூத்த எம்எல்ஏக்களை கட்சி கழற்றிவிட்டுள்ளது. கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவியை ஜாம் நகர் வடக்கு தொகுதியிலும், காங்கிரசிலிருந்து இணைந்த ஹர்திக் படேலை விரம்கம் தொகுதியிலும் கட்சி களமிறக்கியுள்ளது. எப்படியாயினும் தேர்தல் முடிவுகள் வந்த பின்னரே மக்கள் யார் பக்கம் நின்றிருக்கிறார்கள் என்பது தெரிய வரும்.












Click it and Unblock the Notifications