குஜராத்தின் மூன்று தொகுதிக்கான வேட்பாளர்கள்.. பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்துமா?
காந்திநகர்: லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், குஜராத்தின் 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் கட்சி தற்போது வெளியிட்டுள்ளது.
கடந்த 2019ம் ஆண்டை போலவே இந்த முறையும் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடத்தப்படுகிறது. குஜராத்தை பொறுத்த அளவில் மொத்முள்ள 26 தொகுதிகளுக்கும் மே 7ம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது. இந்நிலையில் இம்மாநிலத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இன்று ஜூனாகத், சுரேந்திரநகர், வதோதரா தொகுதிகளுக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் வெளியிட்டிருக்கிறது.

வதோதரா தொகுதியை பொறுத்த அளவில், சாவ்லி, வகோடியா, வதோதரா நகர், சாயாஜிகுஞ்ச், அக்கோட்டா, ராவ்புரா, மஞ்சள்பூர் என 7 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியுள்ளது. வதோதரா லோக்சபா தொகுதியில் கடந்த 1952ம் ஆண்டிலிருந்து தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. மொத்தம் நடைபெற்ற 18 தேர்தல்களில் 4 முறை மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றிருக்கிறது. ஆனால் 7 முறை பாஜக வெற்றிக்கொடி நாட்டியிருக்கிறது.
இந்நிலையில் இந்த முறை பாஜக வேட்பாளருக்கு எதிராக ஜஷ்பால்சிங் பதியார் களமிறங்குவதாக காங்கிரஸ் அறிவித்திருக்கிறது. இங்கு ஏற்கெனவே பாஜக சார்பில் ரஞ்சன்பென் பட் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இவர் இந்த தொகுதியில் கடந்த 2 முறை ஜெயித்து எம்பியாக தேர்வாகியிருக்கிறார். ஆனால் மூன்றாவது முறையும் அவருக்கு சீட் ஒதுக்கியதற்கு கட்சிக்குள் கடும் சலசலப்பு எழுந்தது. இதனையடுத்து அவர் தான் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று விலகிக்கொண்டார்.
சுரேந்திரநகர் தொகுதியை பொறுத்த அளவில், கடந்த இரண்டு முறை பாஜகதான் இங்கு வெற்றி பெற்றிருக்கிறது. ஆனால் சிட்டிங் எம்பியாக இருக்கும் மகேந்திர முஞ்ச்பாராவையே மீண்டு களமிறக்க வேண்டும் என்று உட்கட்சியில் பஞ்சாயத்து வெடித்து கிளமிம்பியிருக்கிறது. இவருக்கு எதிராக சந்து ஷிஹோரா போட்டியிட முன் வந்திருக்கிறார். எனவே, இந்த தொகுதிக்கும் பாஜக தனது வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. இந்நிலையில் காங்கிரஸ் சார்பில் ருத்விக்பாய் லவ்ஜிபாய் மக்வானா களமிறக்கப்பட்டிருக்கிறார்.
ஜூனாகத் தொகுதியில் ராஜேஷ் சுடாசமாவை வேட்பாளராக பாஜக அறிவித்திருக்கிறது. கடந்த 2009 தொடங்கி அடுத்த 3 தேர்தல்களில் இங்கு பாஜகதான் வெற்றி பெற்றிருக்கிறது. இதில் கடைசி இரண்டு முறை சுடாசமாதான் வெற்றி பெற்றிருக்கிறார். எனவே இவருக்கு மூன்றாவது முறை சீட் ஒதுக்கியதில் பாஜகவினரிடையே அதிருப்தி நிலவி வருகிறது. இந்நிலையில் காங்கிரஸ் சார்பில் ஹிராபாய் ஜோத்வா களமிறக்கப்பட்டிருக்கிறார். இவர் குஜராத் காங்கிரஸ் கமிட்டியின் மாநில துணை தலைவராக இருக்கிறார்.
மாநில அரசியலை பொறுத்த அளவில் இந்த மூன்று தொகுதிகளிலும் மீண்டும் பாஜகதான் வெற்றி பெறும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications