ராஜீவ் கொலை வழக்கை சிபிஐ விசாரணை செய்ததில் நம்பிக்கை இல்லை-அர்ஜூன் சிங்கின் பழைய கடிதத்தால் சர்ச்சை
ராஜீவ் காந்தி கொலை வழக்கை சிபிஐ விசாரணை செய்ததில் காங்கிரஸ் கட்சிக்கு நம்பிக்கை இல்லை என்று 1999-ல் அர்ஜூன் சிங் எழுதிய பழைய கடிதம் தற்போது வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி: மறைந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அர்ஜூன் சிங், ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாக எழுதிய கடிதம் தற்போது வெளியாகி சர்ச்சையை எழுப்பியுள்ளது.
1991ம் ஆண்டு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழகம் வந்தார். அப்போது பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தில் படுகொலை செய்யப்பட்டார்.
எம்டிஎம்ஏ
இந்த வழக்கை சிபிஐ விசாரித்தது. ராஜீவ் காந்தி கொலை வழக்கின் சதியின் பின்னணி குறித்து விசாரிக்க எம்டிஎம்ஏ என்ற விசாரணைக் குழுவும் 1999ம் ஆண்டு அமைக்கப்பட்டது.
அத்வானிக்கு கடிதம்
1999ம் ஆண்டு மார்ச் மாதம் அப்போது உள்துறை அமைச்சராக இருந்த அத்வானிக்கு, மறைந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அர்ஜூன் சிங் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்தக் கடிதம் தற்போது வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
நம்பிக்கை இல்லை
அந்தக் கடிதத்தில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிபிஐ விசாரணை செய்ததில் காங்கிரஸ் கட்சிக்கு நம்பிக்கை இல்லை என்று அர்ஜூன் சிங் குறிப்பிட்டுள்ளார். மேலும், எம்டிஎம்ஏ மற்றும் சிபிஐ தலையீடு இல்லாமல் சுதந்திரமாக விசாரணை இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
பெல்ட் வெடிகுண்டு பற்றி விசாரணை
இதுதவிர, வர்மா மற்றும் ஜெயின் கமிஷன்களை விமர்சித்தவர்கள் எம்டிஎம்ஏவில் இருக்கக் கூடாது என்று அர்ஜூன் சிங், அத்வானிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் படுகொலைக்குப் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு குறித்து விசாரிக்கப்பட வேண்டும் என்றும் அர்ஜூன் சிங் எழுதியுள்ள கடிதம் தற்போது வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. முதுபெரும் காங்கிரஸ் தலைவரான அர்ஜூன்சிங் 2011-ம் ஆண்டு காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.