ராகுல் கன்னத்தில் பளிச் முத்தம்.. வயநாடு வெள்ள பாதிப்பை பார்க்க போனபோது தொண்டரின் பாச மழை!
வயநாடு: வயநாடு மக்களவை தொகுதியில் வெள்ள நிவாரணப் பணிகளை ஆய்வு செய்யச்சென்ற ராகுலுக்கு, காங்கிரஸ் தொண்டர் ஒருவர் கன்னத்தில் முத்தமிட்டு தனது அன்பை வெளிப்படுத்தியுள்ளார்.
வயநாடு தொகுதிக்கு 4 நாள் சுற்றுப்பயணமாக சென்றுள்ள ராகுல் காந்தி கடந்த இரண்டு நாட்களாக சுங்கம், மக்கியாடு, ஓமச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் மக்களை சந்தித்து நிவாரணப் பணிகள் பற்றி கேட்டறிந்தார்.

நேற்று பல்வேறு இடங்களில் மழை பெய்ததால் தனது சுற்றுப்பயணத்தை பாதியிலேயே முடித்துக்கொண்டு வயநாட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது தூறலையும் பொருட்படுத்தாமல் ராகுலை சந்திக்கவேண்டும் என்பதற்காக வழியில் ஒரு குழு நின்று கொண்டிருந்தது. அவர்களை கண்ட ராகுல் காரை நிறுத்தி சந்தித்துக்கொண்டிருந்தார்.
ராகுல்காந்தியிடம் கைகுலுக்குவது போல் வந்த தொண்டர் ஒருவர், ராகுலின் முகத்தை இழுத்துப் பிடித்து அவரது கன்னத்தில் முத்தம் கொடுத்து தனது அன்பை வெளிப்படுத்தினார்.இதனை சற்றும் எதிர்பார்க்காத ராகுல் சற்று விக்கித்துப் போனார். உயர்மட்டப் பாதுகாப்பில் உள்ள ஒருவரை தொண்டர் இவ்வாறு அணுகியது பாதுகாப்பு அதிகாரிகளை கடும் கோபம்கொள்ளச் செய்தது. அவரை இழுத்துச் சென்ற அவர்கள் எச்சரித்து அனுப்பினர்.
மைக் பிடித்து பேசிய இடங்களில் எல்லாம் ஒட்டுமொத்த இந்தியாவிற்கே வயநாடு தொகுதி மக்கள் எடுத்துக்காட்டாக திகழ்வதாகவும், வெள்ளத்தின் போது சாதி, மதம், இனம், மொழி ஆகியவைகளை களைந்து ஒற்றுமையோடு செயல்பட்டதாகவும் பெருமிதம் தெரிவித்தார் ராகுல்.












Click it and Unblock the Notifications