கர்நாடக மாநில ஆளுநருக்கு எதிராக காங். பெங்களூருவில் போராட்டம்
கர்நாடக மாநில ஆளுநர் வஜூபாய் வாலாவுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பெங்களூரு : பெரும்பான்மை இல்லாத பாஜகவை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்த கர்நாடக ஆளுநர் வஜூபாய் வாலாவுக்கு எதிராகக் காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். அவர்கள் ஆளுநர் மாளிகை முற்றுகையிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கர்நாடக மாநில சட்டசபைத் தேர்தல் முடிவுகளில் எந்தக் கட்சியும் பெரும்பான்மை பெறாத நிலையில், தனிப்பெரும்பான்மை பெற்ற கட்சி என்பதைக் காரணம் காட்டி ஆளுநர் வஜூபாய் வாலா பாஜகவை ஆட்சியமைக்க அழைப்பு விடுத்தார்.
ஆளுநரின் இந்த முடிவால் கோவா, மேகாலயா, மணிப்பூர் மற்றும் பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் தனிப்பெரும்பான்மை பெற்ற தங்களை ஆட்சியமைக்க அழைக்குமாறு எதிர்க்கட்சிகள் போராட்டத்தை துவக்கியுள்ளன.
இந்நிலையில், கர்நாடக ஆளுநர் வஜூபாய் வாலாவைக் கண்டித்து பெங்களூருவில் காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.