ட்விட்டரில் வீடியோ மூலம் நன்றி சொன்ன மோடி: தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் புகார்
வாரணாசி: வாரணாசி தொகுதியில் வாக்களிக்க வந்த வாக்காளர்களுக்கு நன்றி சொல்லி ட்விட்டரில் வீடியோவை பதிவு செய்த மோடி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
இது தேர்தல் நடத்தை விதிமுறைக்கு எதிரானது என்று தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் கட்சி புகார் அளித்துள்ளது.
பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவேற்றம் செய்துள்ளார்.
அதில் இன்றைக்கு வாரணாசியில் வாக்குப்பதிவு. லோக்சபா தேர்தலின் கடைசி நாள். இந்திய வாக்காளர்களுக்கு வெற்றி கிடைக்கும் நாள். ஜனநாயகத்திற்கு வெற்றி கிட்டும் என்று கூறியுள்ளார்.
இதற்கு காங்கிரஸ் கட்சியின் சட்ட ஆலோசகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது நடத்தை விதிக்கு முரணானது என்று கூறியுள்ள அவர்கள் கண்டிப்பாக மோடி மீது வழக்குப் பதிவு செய்யவேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
தேர்தல் ஆணையத்திடம் வீடியோ ஆதாரத்துடன் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து கூறியுள்ள காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் அஜய் மகேன், மோடியின் இன்றைய பேச்சு நடத்தை விதிமுறைக்கு எதிரானது எனவே தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
கடந்த 30ம் தேதி காந்திநகரில் வாக்களிக்கச் சென்ற மோடி, வாக்குச்சாவடி முன்பு தாமரை சின்னத்துடன் செல்போனில் படம் எடுத்து சர்ச்சையில் சிக்கினார். இன்றைய தினம் வாக்காளர்களுக்கு நன்றி கூறி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.