கர்நாடகா: தேர்தலுக்காக நேபாளில் பூஜையா?.. மோடி செய்வது தவறு.. காங்கிரஸ் கண்டனம்
கர்நாடக சட்டமன்றத்திற்கான தேர்தல் நடக்கும் நிலையில் பிரதமர் மோடி நேபாளில் சிறப்பு பூஜை நடத்துவது மிகவும் தவறானது என்று காங்கிரஸ் கட்சிக் குற்றச்சாட்டு வைத்துள்ளது.
Recommended Video
பெங்களூர்: கர்நாடக சட்டமன்றத்திற்கான தேர்தல் நடக்கும் நிலையில் பிரதமர் மோடி நேபாளில் சிறப்பு பூஜை நடத்துவது மிகவும் தவறானது என்று காங்கிரஸ் கட்சித் குற்றச்சாட்டு வைத்துள்ளது.
கர்நாடக சட்டசபை தேர்தல் தற்போது மும்முரமாக நடந்து வருகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 15ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மொத்தம் 222 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்க உள்ளது.
ஜெயநகர் தொகுதி பாஜக வேட்பாளர் மரணம் அடைந்துவிட்டதால், அந்த தொகுதிக்கான தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் 10,000 வாக்காளர் அடையாள அட்டை ஒரே வீட்டில் இருந்து எடுக்கப்பட்டதால், ராஜ ராஜேஸ்வரி தொகுதி தேர்தலும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தற்போது பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக நேபாளம் சென்று இருக்கிறார். நேற்று நேபாளம் சென்ற அவர் நிறைய கோவில்களில் வழிபாடு நடத்தினார். இந்த நிலையில் இன்று பசுபதி நாத், முக்திநாத் என்ற இரண்டு கோவில்களுக்கு சென்று பூஜை நடத்தி வருகிறார்.கர்நாடகாவில் லிங்காயத்துகள் வழிபடும் சிவ வடிவங்களில் பசுபதி நாத்தும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று காலையில் இருந்து ஒரே இடத்தில் அமர்ந்து அவர் சிறப்பு பூஜை நடத்தி வருகிறார். இதற்கான சிறப்பு யாக ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த பூஜை லிங்காயத்துகளின் வாக்குகளை பெறுவதற்கும் உதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் மோடிக்கு எதிராக காங்கிரஸ் கருத்து தெரிவித்துள்ளது. மோடி இப்படி தேர்தல் சமயத்தில் நேபாளம் சென்று பூஜை நடத்துவது மிகவும் தவறான ஒன்று என்று கண்டனம் தெரிவித்துள்ளது.
அதன்படி ''ஏன் மோடி இவ்வளவு நாள் இல்லாமல் இன்று மட்டும் நேபாளில் சிறப்பு பூஜை செய்ய வேண்டும். இது தேர்தல் நேரத்தில் மக்களை திசை திருப்பும் முயற்சி. லிங்காயத்துகளின் வாக்குகளை பெறுவதற்காக மோடி நாடகம் ஆடுகிறார். தேர்தல் சமயத்தில் ஒரு நாட்டின் பிரதமர் இப்படி செய்வது சரியான விஷயம் கிடையாது'' என்றுள்ளார்.