ஹைதராபாத் விமான நிலைய பெயர் விவகாரம்- ராஜ்யசபாவில் காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் அமளி!
டெல்லி: ஹைதராபாத் ஐதராபாத் விமான நிலைய பெயர் விவகாரம் தொடர்பாக ராஜ்யசபாவில் காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால் சபை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.
ஹைதராபாத் விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்துக்கு என்.டி.ராமராவ் பெயர் அண்மையில் சூட்டப்பட்டது. சர்வதேச விமான நிலையம், முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி பெயரால் அழைக்கப்படுகிறது. ஆனால் விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்துக்கு தனியாக ராமராவ் பெயர் சூட்டியதை எதிர்த்து ராஜ்யசபாவில் இன்று தொடர்ந்து 2-வது நாளாக காங்கிரஸ் கட்சி பிரச்சினை எழுப்பியது.
இன்று காலை சபை தொடங்கியதும் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் ஹனுமாந்தா ராவ், பெயர் மாற்றம் விவகாரத்தை எழுப்பினார். அரசியல் ஆதாயத்திற்காக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் குற்றம்சாட்டினார்.
இதனையடுத்து ராஜ்யசபா துணைத் தலைவர் பி.ஜே.குரியன், நீங்கள் மட்டுமே ராஜிவ் காந்தியின் மேல் அன்பு கொண்ட நபர் அல்ல. ஆனந்த் சர்மாவால் இப்பிரச்சனை நேற்று ஏற்கனவே எழுப்பப்பட்டது. இந்த பிரச்சினையில் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி விளக்கம் அளித்துள்ளார். இவ்விவகாரத்தை நீங்கள் மீண்டும் நீங்கள் பூஜ்ய நேரத்தின்போது எழுப்ப முடியாது. இப்பிரச்சனையை தெரிவிக்க வேண்டும் என்றால் முறைப்படி நோட்டீஸ் கொடுங்கள் என்றார்.
உடனடியாக காங்கிரஸ் எம்.பி.க்கள் சபையின் மையப்பகுதிக்கு சென்று அமளியில் ஈடுபட்டனர். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இச்சம்பத்தை பார்த்துக் கொண்டு இருந்தார்.
இதனையடுத்து குரியன், நீங்கள் எதனை செய்கிறீர்களோ அது ஒழுக்கமற்றது. நீங்கள் இவ்விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்றால் முறைப்படி நோட்டீஸ் வழங்குங்கள், நீங்கள் உங்களுடைய இடத்திற்கு சென்று அமருங்கள் என்று கூறினார். தொடர்ந்து சபையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் சபை 10 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டது.
மீண்டும் சபை தொடங்கியதும் காங்கிரஸ் கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால் பிற்பகல் 2 மணிவரையில் ஒத்திவைக்கப்பட்டது.