For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கன்யாகுமார் மீது பாஜகவினர் தாக்குதல்: டெல்லி போலீஸ் கமிஷனரை டிஸ்மிஸ் செய்யுங்கள்.. காங். ஆவேசம்

Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லி போலீஸ் கமிஷனர் பஸ்ஸியை உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும். இந்த மாத இறுதியோடு ஓய்வு பெறப் போகும் அவருக்கு, ஓய்வுக்குப் பின்னர் எந்தப் பணியும் தரக் கூடாது என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.

காங்கிரஸ் கட்சி மட்டுமல்லாமல், பாஜக தவிர்த்து அத்தனை கட்சிகளிடமும் வாங்கிக் கட்டி வருகிறார் பஸ்ஸி. குறிப்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஆம் ஆத்மி கட்சியினர் இவரை தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். அந்த அளவுக்கு பாரபட்சமாக செயல்படுகிறார் பஸ்ஸி என்பது குற்றச்சாட்டு.

Congress demands the dismissal of Delhi CoP B S Bassi

மேலும் இவரது நிர்வாகத் திறமையும் கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக விவகாரத்திலும் இவரது செயல்பாடுகள் கடும் கண்டனத்துக்கும், விமர்சனத்துக்குள்ளாகியுள்ளன.

பாஜகவினருக்கு ஆதரவாக டெல்லி காவல்துறையை அவர் இயக்கி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த மாத இறுதியுடன் பஸ்ஸி ஓய்வு பெறவுள்ளார். அதன் பிறகு அவர் புதிய பணிக்கு குறி வைத்துள்ளார். அவர், மத்திய தகவல் ஆணையத்தில், தகவல் ஆணையர் பதவியை வழங்குமாறு மத்திய அரசுக்கு அவர் கோரிக்கை வைத்து விண்ணப்பித்துள்ளார்.

இந்தப் பதவிக்கான நியமனத்தை பிரதமர் தலைமையிலான கமிட்டிதான் முடிவு செய்யும். இக்கமிட்டியில், பிரதமர், பிரதமரால் நியமிக்கப்படும் மத்திய அமைச்சர் ஒருவர் மற்றும் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் இடம் பெற்றிருப்பார்கள். தற்போது லோக்சபாவில் அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சி இல்லாத காரணத்தால், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இந்த்க குழுவில் இடம் பெற்றுள்ளார்.

இந்த நிலையில், பஸ்ஸியின் கோரிக்கைக்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பஸ்ஸியை முதலில் டிஸ்மிஸ் செய்ய வேண்டும். அவருக்கு தகவல் ஆணையர் உள்பட வேறு எந்தப் பொறுப்பையும் தரக் கூடாது என்று காங்கிரஸ் கூறியுள்ளது.

இதுகுறித்து டெல்லி காங்கிரஸ் தலைவர் அஜய் மேக்கான் கூறுகையில், பாட்டியாலா கோர்ட் வளாகத்தில் நடந்த கலவரம், வன்முறைக்குக் காரணமே டெல்லி போலீஸ்தான். பாஜக குண்டர்களை சுதந்திரமாக செயல்பட அனுமதித்தது போலீஸ்தான். இதற்கு பஸ்ஸிதான் பொறுப்பேற்க வேண்டும். போலீஸ் காவலில் உள்ள ஒருவரை பாஜகவினர் அடித்துத் தாக்குகின்றனர் என்றால் போலீஸார் அவர்களைத் தடுக்காமல் வேடிக்கை பார்த்துள்ளனர் என்றுதான் அர்த்தம்.

அதேபோல மூத்த வக்கீல்கள், பத்திரிகையாளர்கள் என சகலரும் தாக்கப்பட்டுள்ளனர். இதைத் தடுக்காமல் டெல்லி போலீஸார் வேடிக்கை பார்த்துள்ளனர். பஸ்ஸிதான் இதற்குப் பொறுப்பேற்க வேண்டும்.

எதையுமே தடுக்காமல் அமைதியாக வேடிக்கை பார்த்துள்ளது போலீஸ். பாஜக குண்டர்களுடன் கை கோர்த்து செயல்படுகிறது டெல்லி போலீஸ் என்று கூறியுள்ளார் மேக்கான்.

பஸ்ஸி மீது சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளும் அதிருப்தி

இதற்கிடையே, போலீஸ் கமிஷனர் பஸ்ஸி மீது சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளும் கூட அதிருப்தி அடைந்துள்ளனர். நேற்று நடந்த கன்யாகுமார் தொடர்பான வழக்கு விசாரணையின்போது, பாட்டியாலா கோர்ட் வளாகத்தில் நடந்த வன்முறையில் கன்யாகுமாருக்கோ, வக்கீல்களுக்கோ அல்லது பத்திரிகையாளர்களுக்கோ எதுவும் ஆகி விடவி்ல்லையே என்று நீதிபதிகள் சலமேஸ்வர் மற்றும் அபய் சப்ரே ஆகியோர் கேட்டனர்.

மேலும் இந்த வன்முறை குறித்து அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், இதற்கு டெல்லி போலீஸ் கமிஷனர் பஸ்ஸியே பொறுப்பேற்க வேண்டும் என்றும் கூறினர். தேச துரோக குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள கன்யா குமாரின் பாதுகாப்புக்கு பஸ்ஸிதான் பொறுப்பு என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும் கன்யாகுமார் தாக்கப்பட்டது தொடர்பாக டெல்லி போலீஸ் விளக்கம் அளிக்குமாறும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதுகுறித்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கபப்ட்ட கமிட்டி உறுப்பினர்கள் நடந்த சம்பவம் குறித்து எங்களிடம் அறிக்கை அளித்துள்ளனர். அதில் கன்யாகுமாரை விசாரணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வந்தபோது வன்முறை மூண்டதாகவும், அதில் கன்யா குமார் தாக்கப்பட்டதாகவும் கூறியுள்ளனர். எனவே இந்த தாக்குதல் சம்பவத்திற்கு நேரடியாக டெல்லி போலீஸ் கமிஷனரே பொறுப்பு என்று நாங்கள் அறிவிக்கிறோம். கன்யாகுமாரின் பாதுகாப்புக்கு தனிப்பட்ட முறையில் டெல்லி போலீஸ் கமிஷனர்தான் பொறுப்பேற்க வேண்டும் என்றனர்.

முன்னதாக சுப்ரீம் கோர்ட் கமிட்டி உறுப்பினர்கள் தாக்கல் செய்த மனுவில் வன்முறையாளர்கள் தங்களையும் தாக்கியதா்கவும், பாகிஸ்தானின் கைக்கூலிகள் என்றும், ஆபாசமாகவும் திட்டி தாக்கியதாகவும் கூறினர். மேலும் பூத்தொட்டிகள், பாட்டில்கள், கற்களை வீசியும் தாக்கியதாகவும் அவர்கள் கூறினர்.

கன்யாகுமார், வக்கீல்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய டெல்லி காவல்துறைக்கு உத்தரவிடக் கோரி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக முன்னாள் மாணவர் ஜெயப்பிரகாஷ் தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணையின்போது நேற்று இந்த உத்தரவுகளும், புகார்களும் தெரிவிக்கப்பட்டன.

English summary
The Congress party has demanded the centre to dismiss Delhi CoP B S Bassi for the violence in the Patiala court campus.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X