கர்நாடகா தேர்தல்: எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லை- தொங்கு சட்டசபை அமையும்: பப்ளிக் டிவி சர்வே
கர்நாடகாவில் தொங்கு சட்டசபைதான் அமையும் என்கிறது பப்ளிக் டிவியின் கருத்து கணிப்பு.
Recommended Video

பெங்களூரு: கர்நாடகா சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது; தொங்கு சட்டசபைதான் அமையும் என கன்னட சேனலான பப்ளிக் டிவி கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது.
கர்நாடகா சட்டசபை தேர்தல் வரும் 12-ந் தேதி நடைபெற உள்ளது. மே 15-ந் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன. இத்தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பது தொடர்பான பல்வேறு கருத்து கணிப்புகள் வெளியாகி உள்ளன.

காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் என்றும் தொங்கு சட்டசபைக்கே வாய்ப்புகள் என்றும் கருத்து கணிப்புகள் கூறுகின்றன. மதச்சார்பற்ற ஜனதா தளம்தான் கிங் மேக்கராக இருக்கும் என்பது அனைத்து சர்வேக்களின் பொது கருத்தாக உள்ளது.
கன்னட சேனலான பப்ளிக் டிவி நேற்று கருத்து கணிப்பு முடிவுகளை வெளியிட்டது. அதில், காங்கிரஸ் கட்சிக்கு 89 முதல் 94 இடங்களும் பாஜகவுக்கு 86 முதல் 91 இடங்களும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு 38 முதல் 43 இடங்கள் கிடைக்கும் என்கிறது இக்கருத்து கணிப்பு. காங்கிரஸுக்கு 36%; பாஜகவுக்கு 33%; மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு 23% வாக்குகள் கிடைக்குமாம்.
கர்நாடகாவில் தொங்கு சட்டசபைக்கே வாய்ப்பு என்பது பப்ளிக் டிவியின் கருத்து கணிப்பு முடிவு. சித்தராமையா அரசின் அன்னபாக்யா திட்டமானது மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தாலும் லிங்காயத்துகளுக்கு தனி மத அங்கீகாரம் அளித்தது கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளதாம்.
பெங்களூருவில் 14 தொகுதிகளை காங்கிரஸ் கைப்பற்றுமாம்; பாஜக 12- மதச்சார்பற்ற ஜனதா தளம் 1 தொகுதிகளில் வெல்லும். இதேபோல் இந்தியா டுடே குழுமத்தின் கார்வி இன்ஸைட் கருத்து கணிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.
அதில், காங்கிரஸ் கட்சி 90 முதல் 101 இடங்களையும் பாஜக 78 முதல் 86 இடங்களையும் மதச்சார்பற்ற ஜனதா தளம் 34 முதல் 43 தொகுதிகளையும் கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications