விலைவாசி உயர்வுக்கு காங்கிரஸ் அரசு தான் காரணம்: அருண் ஜேட்லி குற்றச்சாட்டு
டெல்லி: விலைவாசி உயர்வுக்கு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தான் காரணம் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி குற்றம் சாட்டியுள்ளார்.
ராஜ்யசபாவில் விலைவாசி உயர்வு குறித்து எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பின. மேலும் தேர்தல் பிரச்சாரத்தின்போது நல்ல நாட்கள் வருகிறது என்று கூறிவிட்டு பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர், வெங்காயம், உருளைக்கிழங்கு ஆகியவற்றின் விலைகள் மற்றும் ரயில் கட்டணத்தை உயர்த்தியது எந்த வகையில் நியாயம் என்று அவை கேள்வி எழுப்பின.
அதற்கு மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி பதில் அளித்து பேசுகையில்,
மோடி அரசு
மோடி தலைமையிலான அரசு பதவிக்கு வந்ததும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுத்தது.
வெங்காயம்
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் காலத்தில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.100க்கு விற்கப்பட்டது.
பட்ஜெட்
ரயில்வே பட்ஜெட் மற்றும் பொது பட்ஜெட் தாக்கலின்போது மத்திய அரசு தனது நிதிக் கொள்கை குறித்து அறிவிப்பு வெளியிடும். ஆனால் அதற்குள் எதிர்கட்சிகள் மத்திய அரசு மீது குறை கூறுகின்றன.
ரயில் கட்டணம்
ரயில் கட்டணத்தை உயர்த்துவது என்று முந்தைய அரசு கடந்த பிப்ரவரி மாதம் 11ம் தேதி முடிவு எடுத்தது. டீசல் விலை உயர்விலும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் கொள்கையையே மத்திய அரசு பின்பற்றி வருகிறது என்றார் ஜேட்லி.