காங். என்னை கொல்ல கனவு காண்கிறது.. ஆனால் எனக்கு பின் ஒரு கூட்டமே உள்ளது.. மோடி பன்ச்!
போபால்: காங்கிரஸ் கட்சி தன்னை கொலை செய்ய வேண்டும் என்று கனவு காண்கிறது என்று பிரதமர் மோடி பிரச்சாரத்தில் பேசி இருக்கிறார்.
கடந்த ஒரு மாதமாக பிரதமர் மோடி தேர்தலுக்காக தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் பிரதமர் மோடி நேற்று மத்திய பிரதேசத்தில் பிரச்சாரம் செய்தார்.
அங்கு இட்டர்ஸி என்ற பகுதியில் அவர் பாஜக தொண்டர்கள் முன்னிலையில் பேசினார். இந்த பிரச்சாரத்தில் மிகப்பெரிய அளவில் கூட்டம் கூடி இருந்தது.
மே 21ல் முக்கிய மீட்டிங்.. அன்றே பிரதமரை தேர்வு செய்வோம்.. எதிர்க்கட்சிகள் அதிரடி திட்டம்!
கொலை
பிரதமர் மோடி தனது பிரச்சாரத்தில், உங்களுக்கு யார் வேண்டும் என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள். 55 ஆண்டுகள் ஆட்சி செய்த குடும்பம் வேண்டுமா? இல்லை 55 மாதங்கள் நாட்டை ஆண்ட டீ கடைக்காரர் வேண்டுமா. காங்கிரஸ் கட்சி என்னை வெறுக்கிறது. என்னை கொலை செய்யலாம் என்று கனவு கூட காண்கிறது.
நடக்காது
ஆனால் என்னை அவ்வளவு எளிதில் கொன்றுவிட முடியாது. எனக்கு பின் பாதுகாவலுக்கு இந்த மத்திய பிரதேச மக்கள் இருக்கிறார்கள். எனக்கு பின் பெரிய மக்கள் கூட்டம் உள்ளது. எனக்கு பின் மொத்த இந்திய மக்களும் இருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சியால் என்னை ஒன்றும் செய்ய முடியாது.
போலீஸ் எப்படி
போலீசால் தேடப்படும் சாகிர் நாயக் போன்ற குற்றவாளிகளுடன் காங்கிரஸ் கட்சியினர் புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்கள். நாயக்கை காங்கிரஸ் கட்சி அமைதிக்கான தூதுவர் போல பாவிக்கிறது. தீவிரவாதம் எந்த உருவத்தில் வந்தாலும் நாம் அதை அழிக்க வேண்டும். பாஜக அதை செய்யும்.
பலம்
நம்முடைய புதிய இந்தியா தீவிரவாதத்திற்கு பதில் அளிக்கிறது. தோட்டாக்களுக்கு நாம் தோட்டாக்கள் மூலம் பதில் அளிப்போம். இந்திய எல்லைக்குள்ளும், எல்லைக்கு வெளியேயும், நம்மை யாரும் சீண்ட முடியாது. நம் மீது எந்த விதமான தாக்குதலும் நடத்த முடியாது.
எப்படி வருவார்கள்
வாக்களிக்க போகும் முன் மக்கள் புல்வாமாவில் இறந்தவர்களை நினைக்க வேண்டும். நீங்கள் தாமரையில் வாக்களித்தால் உங்கள் உடலுக்குள் ராணுவ வீரரின் ஆன்மா உயிர் கொள்ளும். அந்த ராணுவ வீரர் இந்திய நாட்டை பாதுகாத்து, இந்திய நாட்டிற்காக உயிர் துறப்பார் என்று குறிப்பிட்டுள்ளார்.