சத்தீஸ்கர்: காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை பாஜக 'கபளீகரம்' செய்யுமோ? பதற்றத்துடன் ஓடி வந்த அஜய் மக்கான்!
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநில சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில் நேற்று இரவே காங்கிரஸ் மேலிடப் பார்வையாளரான அக்கட்சியின் பொருளாளர் அஜய்மக்கான் ராய்ப்பூர் வந்தடைந்தார்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கிறது. மாநில முதல்வராக பூபேஷ் பாகல் இருந்து வருகிறார். சத்தீஸ்கரில் மொத்தம் 90 தொகுதிகள் உள்ளன. இம்மாநிலத்தில் நவம்பர் 7, நவம்பர் 17 என இரு கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெற்றது. சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல் கட்ட தேர்தலில் அதாவது மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தல்களுக்கு இடையே நடைபெற்ற தேர்தலில் சுமார் 78% வாக்குகள் பதிவாகி சரித்திரம் படைத்தது. 2-ம் கட்ட தேர்தலில் 68.15% வாக்குகள் பதிவாகின.

சத்தீஸ்கர் சட்டசபை தேர்தல் தொடர்பான தேர்தலுக்கு முந்தைய, பிந்தைய கருத்து கணிப்புகள் பெரும்பாலும் ஆளும் காங்கிரஸ் ஆட்சியைத் தக்க வைக்கும் என்றே தெரிவித்தன. ஆனால் பிரதான எதிர்க்கட்சியான பாஜக, ஆளும் காங்கிரஸுக்கு சவால்விடும் வகையில் அதிக இடங்களைக் கைப்பற்றும் எனவும் தெரிவித்தன. இதனால் சத்தீஸ்கரில் காங்கிரஸ், பாஜக இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இந்த நிலையில் தெலுங்கானா, சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேச மாநிலங்களில் காங்கிரஸ் வேட்பாளர்கள் அல்லது எம்.எல்.ஏக்களைப் பாதுகாக்க காங்கிரஸ் மேலிடம் முன்னெச்சரிக்கையாக உஷார் நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது. இந்த 4 மாநிலங்களுக்கும் மேலிட பார்வையாளர்கள் குழுவை அதிரடியாக நியமித்தது. இந்த மேலிடப் பார்வையாளர்கள் உடனடியாக 4 மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்.
தெலுங்கானாவில் நேற்று இரவு முதலே கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவகுமார் முகாமிட்டுள்ளார். இதேபோல சத்தீஸ்கர் மாநிலத்துக்கு காங்கிரஸ் கமிட்டியின் பொருளாளரான மூத்த தலைவர் அஜய் மக்கான் விரைந்தார். ராய்ப்பூர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அஜய் மக்கான், ஆளும் காங்கிரஸ் கட்சியை விட டபுள் டிஜிட் இடங்கள் வித்தியாசல் வெல்வது உறுதி. சத்தீஸ்கரில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் என்பதில் நம்பிக்கையுடன் இருக்கிறோம். சத்தீஸ்கர் தேர்தலில் பாஜகவைவிட 10% வாக்குகளைக் கூடுதலாக பெறும் என்பது எங்களது எதிர்பார்ப்பு. இவ்வாறு அஜய் மக்கான் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications