எக்சிட் போல் முடிவுகளில் பின்னடைவு: சோனியாவுடன் காங். மூத்த தலைவர்கள் அவசர ஆலோசனை
டெல்லி: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் காங்கிரஸுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ள நிலையில் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் சோனியா காந்தியை சந்தித்து அவசர ஆலோசனை நடத்தியுள்ளனர்.
நாடாளுமன்ற தேர்தல் கடந்த மாதம் 7ம் தேதி முதல் மே 12ம் தேதி வரை 9 கட்டமாக நடந்து முடிந்துள்ளது. இதையடுத்து நேற்று மாலை முதல் தேர்தலுக்கு பிந்தைய கருக்கணிப்புகளின் முடிவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன.
இதுவரை வெளியான கருத்துக்கணிப்பு முடிவுகள் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்துள்ளது. மேலும் காங்கிரஸுக்கு இந்த தேர்தலில் பின்னடைவு ஏற்படும் என்று கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
இந்த சூழலில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான வயலார் ரவி, ஷகீல் அகமது, ஜனார்தன் திவிவேதி மற்றும் அகமது பட்டேல் ஆகியோர் கட்சி தலைவரான சோனியா காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்து அவசர ஆலோசனை நடத்தியுள்ளனர். இனி கட்சி மேற்கொள்ள வேண்டிய யுத்திகள் குறித்து அவர்கள் சோனியாவுடன் ஆலோசனை நடத்தியுள்ளனர் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.