காங்.கூட்டணியில் இருந்து தேசிய மாநாட்டு கட்சி விலகல்?காஷ்மீர் முதல்வர் ஒமர் ராஜினாமா?
ஸ்ரீநகர்: காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இருந்து தேசிய மாநாட்டு கட்சியும் விலக இருக்கிறது. அத்துடன் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி செய்து வரும் முதல்வர் ஒமர் அப்துல்லா ராஜினாமா செய்யவும் திட்டமிட்டுள்ளார் என கூறப்படுகிறது.
லோக்சபா தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் அக்டோபர்-நவம்பர் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில் தேசிய மாநாட்டுக் கட்சி சார்பில் லோக்சபா தேர்தலுக்கு முன்பாக மாநிலத்தில் 700 நிர்வாக மையங்களை உருவாக்க ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா திட்டமிட்டிருந்தார். அதற்கு காங்கிரஸ் கட்சி முட்டுக்கட்டை போட்டிருக்கிறது.
இதற்கு தீர்வு காணும் விதமாக அகில இந்திய காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளரும், காஷ்மீர் மாநில பொறுப்பாளருமான அம்பிகா சோனி, மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் சைஃபுதீன் சோஸ், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் மற்றும் முதல்வர் ஒமர் அப்துல்லா ஆகியோர் கலந்து கொண்ட கூட்டம் நேற்று முன் தினம் நடைபெற்றது. ஆனால் இந்த கூட்டத்தில் முடிவுகள் எதுவும் எட்டப்படாமல் தோல்வியில் முடிந்தது.
இந்த நிர்வாக மையங்களை உருவாக்கினால் சட்டசபை தேர்தலில் தேசிய மாநாட்டுக் கட்சிக்கு அதிக வாக்குகள் கிடைக்கும் என்பது முதல்வர் ஒமர் அப்துல்லாவின் எண்ணம். ஆனால் காங்கிரஸ் முட்டுக் கட்டை போட்டு வருகிறது.
இதனால் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இருந்து விலகலாம் என தேசிய மாநாட்டுக் கட்சி முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. அப்படி விலகும் போது ஜம்மு காஷ்மீர் முதல்வர் பதவியையும் ஒமர் அப்துல்லா ராஜினாமா செய்துவிட்டு லோக்சபா தேர்தலுடன் மாநில சட்டசபை தேர்தலையும் எதிர்கொள்ளவும் அவர் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.